Skip to main content

“எங்க மகனை பார்க்கவோ, பேசவோ விடமாட்றாங்க...” -  கோவை சம்பவத்தில் கைதானவர்களின் பெற்றோர்கள் ஆதங்கம் 

Published on 08/11/2022 | Edited on 08/11/2022

 

Parents those arrested Coimbatore incident allege

 

“எங்க மகனை பார்க்கவோ, பேசவோ விடமாட்றாங்க...” என கோவை சம்பவத்தில் கைதானவர்களைச் சந்திக்கப் பெற்றோர்கள் அனுமதிக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

கோவை மாவட்டம் உக்கடம் அருகே காரில் சிலிண்டர் வெடித்த விவகாரம்,  தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், அவரது வீட்டுக்குள் 75 கிலோ வெடி பொருட்கள் பதுக்கி இருப்பதும் போலீஸ் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. 

 

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தால்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்த நிலையில், அதில் 5 பேர் உபா சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது  இந்த வழக்கு விசாரணை தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.

 

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 6 பேரும் கோவை சிறையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் கோவை சிறையிலிருந்து போலீஸ் பாதுகாப்புடன் சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது, திங்கட்கிழமை காலை 10 மணியளவில் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பார்க்க அவரது குடும்பத்தினர் சிறைத்துறையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

 

ஆனால், அவர்களைப் பார்க்க போலீசார் அனுமதிக்கவில்லை எனக் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இதுகுறித்து கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் கூறும்போது “நாங்க எங்களுடைய மகனை பார்க்க,  மனு கொடுத்தும் அந்த மனுவை  திரும்ப அனுப்பிட்டாங்க. மீண்டும் காலையில் 10 மணிக்கு சிறைத்துறைக்கு மனு அனுப்பினோம். அப்போ கூட எங்கள் மகனை பார்க்கவோ, பேசவோ அனுமதிக்கவில்லை. இந்த நாட்டுல நீதியெல்லாம் செத்துப்போச்சி” எனத் தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.