Skip to main content

சேலத்தில் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்; கேரளாவை சேர்ந்தவர்கள் உள்பட 7 பேர் பலி; 38 பேர் பலத்த காயம்

Published on 01/09/2018 | Edited on 01/09/2018


 

y2


சேலத்தில் நள்ளிரவில் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக பலியாயினர். பலத்த காயம் அடைந்த 38 பேருக்கு சேலம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரவிந்த் பஸ் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான தனியார் பேருந்து,  நாற்பதுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. கர்நாடகா மாநிலம்  பெங்களூரில் இருந்து 24 பயணிகளுடன் யாத்ரா டிராவல்ஸ் என்ற படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்து சேலம் வழியாக கொச்சின் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. 


நள்ளிரவு 1.15 மணியளவில் (ஆகஸ்ட் 31 - செப். 1, 2018), சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, சேலம் குரங்குசாவடி அருகே சாலையோரமாக பழுதாகி நின்ற பொலீரோ பிக்அப் வேன் மீது பலமாக  மோதியது. இதில் அந்த வேன் நிலைகுலைந்தது. 

 

v


அந்த வேன் குண்டு மல்லி பூக்களை பாரம் ஏற்றிக்கொண்டு பெங்களூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது டயர் பஞ்சரானதால் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இண்டிகேட்டர் விளக்குகள் போடப்பட்டு இருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. சேலத்தில் இருந்து சென்ற தனியார் பேருந்து வேன் மீது மோதிய வேகத்தில் சாலையின்  குறுக்கே உள்ள தடுப்புகளை உடைத்துக்கொண்டு, அடுத்த பக்கமுள்ள சாலையில் பாய்ந்து சென்று மீண்டும் சேலத்துக்குச்  செல்லும் வழியை நோக்கி திரும்பி நின்றது.


இதை சற்றும் எதிர்பாராத பெங்களூரில் இருந்து மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து, விபத்தில் சிக்கிய பேருந்து மீது அசுர வேகத்தில் மோதியது. அதே வேகத்தில் அந்த ஆம்னி பேருந்து சர்வீஸ் சாலையில் தலைகுப்புற  கவிழ்ந்தது. 

 

an


பெங்களூரில் சாப்ட்வேர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் வார விடுமுறையைக் கழிக்க சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக இரவு 9.30 மணியளவில் ஆம்னி பேருந்தில் ஏறியுள்ளனர். அதனால் பலரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்துள்ள நேரத்தில்தான் இந்த கோர விபத்து நடந்துள்ளது.


இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்களில் 2 பேர் பெண்கள்.  சேலம் சாலை விபத்தில் கேரளாவை சார்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்குபேர் பலியாகியுள்ளனர்.

 சிறுவன் மட்டும் காயமின்றி உயிர் பிழைத்தான்.  சிறுவன் ஈத்தனின் தாத்தா மோன்சி ஜோசப், 

பாட்டி அல்போன்சா, தந்தை சிஜி வின்செண்ட்,  தாய் பினு மேரி வின்செண்ட் ஆகிய நான்கு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஏற்கனவே இருவரின் அடையாளம் தெரிய வந்துள்ளது.  இவர்களுடன் சேர்த்து மொத்தம் 6 பேரின் சடலம் அடையாளம் காணப்பட்டு உள்ளது.


ஒருவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.  சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.


விபத்து நடந்தது நள்ளிரவு நேரம் என்பதோடு இறந்தவர்கள் பற்றிய விவரங்களை உடனடியாக சேகரிக்க முடியாமல் காவல்துறையினரும் தடுமாறினர். இதனால் உறவினர்களுக்கு தகவல் அளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுநர் சுரேஷ்குமாரும் (40) பலத்த காயம் அடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணித்தவர்களில் 38 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் 17 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 21 பேர் கருப்பூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.


சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்கள் விவரம்: 


1. சுரேஷ்குமார் 2. பழனியம்மாள் (தர்மபுரி) 3. பாலச்சந்திரன் (பெங்களூர்) 4. ஷீலா (கேரளா&பாலக்காடு) 5. ஏஞ்சல் (கேரளா) 6. தாமஸ் (கிருஷ்ணகிரி) 7. ஆன்சில் (கேரளா) 8. லஹரி (கேரளா) 9. விமலா (தர்மபுரி) 10. ஜாய்ஸ் (தர்மபுரி) 11. பிரதீப்  (கேரளா) 12. கோபாலகிருஷ்ணன் (பெங்களூர்) 13. திலீப் (நல்லம்பள்ளி) 14. எபின் ஆப்ரஹாம் (கோட்டயம்) 15. சந்திரன்  (கேரளா) 16. கேம்ப் (கேரளா) 17. அடையாளம் தெரியாத ஆண் குழந்தை.


விபத்தில் காயம் அடைந்தவர்களை நேரில் பார்க்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ள  நிலையில், அதிமுக எம்பி பன்னீர்செல்வம், எம்எல்ஏக்கள் வெங்கடாசலம், சக்திவேல் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு  நேரில் சென்று சிகிச்சை விவரங்களைக் கேட்டறிந்தனர். சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கரும் நேரில் வந்து சிகிச்சை  விவரங்களை கேட்டறிந்தார். இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஓமலூரில் கலப்பட மதுபானம் விற்பனை; 5 பேர் கைது

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Sale of adulterated liquor at Omalur; 5 people arrested

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உட்பட 62 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளச்சாராய மரணத்தை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கலப்படம் மதுபானம் விற்கப்பட்டது தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சாதாரண உடையில் காவல்துறையினர் ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது கலப்பட மதுபானம் விற்று வந்த 5 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கலப்பட மது பாட்டில்கள், செல்போன், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு காவல்நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

10 மணி வரை மழை; நான்கு மாவட்டங்களுக்கு அலர்ட்

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
Rain till 10 p.m.; Alert for four districts

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக உள் மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் இரவு 10 மணி வரை சேலம், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.