Skip to main content

கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட 'பெட்ரோல் பங்க்' ஊழியர்கள்!

Published on 07/06/2020 | Edited on 07/06/2020




 

nagai district petrol punk labours incident police investigation


நாகை மாவட்டத்தில் உள்ள திருமருகல் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்த ஊழியர்கள் இருவர் கத்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர்.


இது குறித்து விசாரித்தோம், "புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுக்கா நம்பிவயல் காட்டாத்தியை சேர்ந்தவர் ஆனந்தன். அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தனின் நண்பர் முருகேசன் ஆகிய இரண்டு பேரும் நாகை அருகே உள்ள திருமருகல் ஜெயசந்திரா ஏஜென்சிஸ் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தனர். அந்த பங்க் கச்சனம் பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவருக்கு சொந்தமானது. 

அந்த பங்கில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்த முருகேசன் தற்கொலை செய்துகொள்ளும் வரை விசுவாசமான வேலைக்காரராகவே இருந்து வந்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முருகேசனின் நண்பன் ஆனந்தனை அழைத்துவந்து வேலைக்கு சேர்த்துவிட்டுள்ளார். இவர் பங்கின் மொத்த வரவு செலவு கணக்குகளையும் பார்த்து வந்துள்ளார்.

 

nagai district petrol punk labours incident police investigation

இந்நிலையில் வரவு செலவு கணக்கு பார்த்ததில் சுமார் 8 லட்சம் ரூபாய் கணக்கு வராததால் திருமருகல் பகுதியை சேர்ந்த சில கந்துவட்டி கும்பலிடம் வட்டிக்கு பணம் வாங்கி இருவரும் சமாளித்து வந்திருக்கின்றனர். தொடர்ந்து அந்த பணம் கணக்கிற்கு வராததால் தொகையை இருவருமே ஒப்புகொள்வதாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உரிமையாளர் கலியபெருமாளிடம் எழுதி கொடுத்துவிட்டு அங்கேயே வேலைப் பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு சென்ற ஆனந்தன் கடந்த 2 ம் தேதி விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஆனந்தனின் இறப்புக் குறித்தான தகவல் அறிந்த பெட்ரோல் பங்கின் உரிமையாளர் கலியபெருமாள் திட்டச்சேரி காவல்நிலையத்திற்கு நேற்று (06/06/2020) இரவு முருகேசனை அழைத்து சென்று முருகேசன் மீதே புகார் அளித்திருக்கிறார், அங்கு முழு தொகையையும் முருகேசனை ஒப்புகொள்ளும்படி போலீசாரை வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முருகேசன் மொத்த தொகையும் தன்னால் இனி கொடுக்க முடியுமா? என்கிற அச்சத்திலும், தனது நண்பன் ஆனந்தன் உயிரிழந்த சோகத்திலும் பெட்ரோல் பங்கில் உள்ள அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

nagai district petrol punk labours incident police investigation

இது குறித்து தகவலறிந்த திட்டச்சேரி காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இரண்டு பேரின் உறவினர்களும் நாகைக்கு வந்து உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், கந்துவட்டி கும்பலால் தொடர்ந்து மிரட்டப்பட்டு உயிரிழப்பு நடந்துள்ளதாகவும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர் திட்டச்சேரி போலீசார்.

ஆனந்தன், முருகேசன் ஆகிய இரண்டு பேரின் உயிரிழப்பு உரிமையாளரால் நடந்ததா? அல்லது கந்துவட்டி கும்பலிடம் கடன் வாங்கியதால் அவர்கள் மிரட்டி உயிரிழந்து உள்ளார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் நாகை டிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story

தாயோடு நீச்சல் பழகிய குழந்தைகள்; 3 பேர் உயிரிழப்பு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Children who swim with their mother; 3 people lost their lives

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40.) இவரது மனைவி பவித்ரா (30). இத்தம்பதியினரின் மகன் ரித்திக் (9),மகள் நித்திகா ஸ்ரீ (7). தற்போது கோடை விடுமுறையில் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர். பவித்ரா தினமும் தனது பிள்ளைகளை அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் பழக கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்படி இன்று பவித்ரா தனது பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். குளிக்கப்போனவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடத்துவங்கினர். அப்போது சிறுமி நித்திகாஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என முதல் கட்டமாகக் கூறப்படுகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.