திருச்சி மரக்கடை அருகே வளையல்கார தெருவில் மாரியம்மன் கோவில் உள்ளது. தற்போது இந்தக் கோவிலில் நவராத்திரி பூஜை நடைபெற்றுவருகிறது. இதையொட்டி அம்மனுக்குத் தினமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றுவருகிறது. பூஜை முடிந்ததும் கோவிலைப் பூட்டிவிட்டு கோவில் நிர்வாகிகள் சென்றுவிட்டனர். வழக்கம்போல் நேற்று (12.10.2021) காலை வந்து பார்த்தபோது உற்சவர் அம்மனின் கழுத்தில் இருந்த நகைகள் திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக காந்தி மார்க்கெட் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், தங்கம் என்று நினைத்து மர்ம ஆசாமி ஒருவர் கோவில் கதவின் பூட்டை உடைக்காமல் கதவின் இடைவெளி வழியாக பெரிய குச்சியை விட்டு அவற்றை திருடியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.