கரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலமும், ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "தமிழகத்தில் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நாளை மறுநாள் (30/11/2020) அறிக்கை அளிக்கப்படும். முதல்வரிடம் அறிக்கை தந்த 5 நாளில் பாடத்திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும். தேர்தல் பிரச்சாரம் எப்போது தொடங்கும் மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்து, அ.தி.மு.க. உயர்நிலைக்குழு முடிவு செய்யும். அரையாண்டு தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் என்ற தகவல் தவறானது" என தெரிவித்துள்ளார்.