Skip to main content

உதிரப்போக்கில் துடிதுடித்த மனநலம் பாதித்த பெண்... பிரசவம் பார்த்த பெண் காவலர்கள்..

Published on 02/09/2021 | Edited on 02/09/2021

 

Mentally illness woman suffered from delivery pain inspector who helps

 

சாலையின் ஓரத்தில் பிரசவ வலியால் துடித்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பெண் போலீசார் பிரசவம் பார்த்து தாயையும், குழந்தையையும் காப்பாற்றியதோடு குற்றவாளியையும் விரைந்து கைது செய்தது பொதுமக்கள் மத்தியில் பெருமைப்பட செய்துள்ளது. அதோடு தஞ்சை சரக டி.ஐ.ஜி அந்தப் பெண் போலீசாரை அழைத்து பாராட்டி சான்றிதழும், வெகுமதியும் வழங்கியது காவல்துறை வட்டாரத்தையே பெருமையடைய செய்திருக்கிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பொற்றாமரை குளத்தின் கிழக்கு கரையில் முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆதரவற்ற நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டு அங்கேயே தங்கியிருந்தார். அவர் யாரிடம் பேசாமலும், யாசகம் பெறாமலும், எவருக்கும் தொந்தரவு கொடுக்காமலும் அங்கேயே அமைதியாக இருந்துவந்தார்.

 

காலையிலோ, மதியமோ, கோயிலுக்கு வருவோர் போவோர் யாராவது அவருக்கு உணவு கொடுத்தால், அதுவும் மனதில் வாங்கும் எண்ணம் தோன்றினால் மட்டுமே வாங்கி சாப்பிடுவார். இந்த சூழலில் அவர் கர்ப்பமாக இருந்திருக்கிறார். பெரிய நைட்டி அணிந்திருந்ததால் அவர் கர்ப்பமாக இருப்பது  வெளியே தெரியாமலேயே இருந்துள்ளது. மேலும், வலியால் துடித்திருக்கிறார். பொற்றாமரை குளத்தின் கிழக்கு கரைக்கு கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தின் முதல்நிலை தலைமைக் காவலர் சுகுனா என்பவர் எதேச்சையாக சென்றபோது, அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் சுவரில் சாய்ந்துகொண்டு பிரசவ வலியால் முனங்கியபடியே துடித்திருக்கிறார். அதனை சற்றும் எதிர்பார்த்திடாத பெண் காவலர், அந்தப் பெண் பிரசவ வலியால் துடிக்கிறார் என்பதை உணர்ந்து, சற்றும் யோசிக்காமல் அந்தப் பெண் அருகில் சென்று பார்த்ததும் அதிர்ந்துபோயிருக்கிறார்.

 

Mentally illness woman suffered from delivery pain inspector who helps

 

அந்தப் பெண்ணுக்கு ரத்தம் வெளியேறிக்கொண்டிருந்ததைக் கண்டு எப்படி இந்தப் பெண் கர்ப்பமானாள் என யோசித்தபடியே அருகில் இருந்த மேற்கு காவல் நிலையத்துக்கு ஓடிச் சென்று அங்கிருந்த சில பெண் காவலர்களை உதவிக்கு அழைத்துக் கொண்டு, அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு முதலுதவி செய்தார். அப்போது அந்தப் பெண்ணுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்து தரையில் விழுந்துள்ளது. பின்னர் மேற்கு காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் பேபி, காவல் நிலையத்தில் வைத்திருந்த தன்னுடைய இரண்டு சேலைகளைக் கொண்டுவந்து அந்தப் பெண் மீது போர்த்தி அவரைப் பாதுகாத்தார். பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்த பெண்கள் வந்து பிரசவித்த அந்த பெண்ணுக்கு செய்ய வேண்டியவற்றை செய்தனர். அதன்பிறகு 108 ஆம்புலன்ஸை வரவழைத்து, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக சேர்த்தனர்.

 

மேலும், அப்பெண்ணிற்கு உதவியாக இரண்டு பெண் காவலர்களையும் நியமித்தார் ஆய்வாளர் பேபி. இதுகுறித்து போலீசாரிடம் கேட்டோம், “மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்பதால், அந்தப் பெண்ணிடமிருந்து எந்தவித தகவலையும் பெற முடியவில்லை என்பதால், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப் பிரியாவுக்கு தகவல் கொடுத்தோம். மனநலம் பாதித்த பெண்ணுக்குப் பிரசவம் நடந்த இடம் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியாக இருந்தாலும், மேற்கு காவல் நிலையத்தின் பெண் காவலர்கள் அனைவரும் அங்கு சென்று அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்து தாயையும் சேயையும் காப்பாற்றியதைக் கேட்டு எஸ்.பி. ரவளிப்பிரியா பாராட்டினார். மேலும்,  மனநலம் பாதிக்கப்பட்ட பெண், குழந்தை பெற காரணமாக இருந்த அவனை தேடிவந்தோம்.

 

Mentally illness woman suffered from delivery pain inspector who helps

 

இந்தப் பெண் ஒரே இடத்தில் இருந்ததால், யார் அப்பெண்ணை இந்த நிலைமைக்கு ஆளாக்கியது என அக்கம்பக்கத்தில் விசாரித்தோம். அப்போது பாலக்கரையைச் சேர்ந்த ஒருவன் அடிக்கடி வந்து அப்பெண்ணை சந்தித்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று (01.09.2021) நள்ளிரவு பாலக்கரைக்குச் சென்று அங்கிருந்த ஜான் (40) என்பவரை பிடித்து விசாரித்தபோது, இந்தப் பெண்ணைக் கர்ப்பமாக்கியது ஜான்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவனை  கைது செய்துள்ளோம்” என்கிறார்கள். ஆதரவற்ற பெண்ணுக்கு மனிதாபிமானத்தோடு பிரசவம் பார்த்ததும், உடனடியாக குற்றவாளியைக் கைது செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி, அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுபாஷினி, பெண்ணுக்குப் பிரசவம் பார்க்க உதவியாக இருந்த பெண் தலைமை காவலர் சரிதா, முதல் நிலை பெண் காவலர் சுகுனா ஆகியோரை தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி. பிரவேஸ்குமார் தன்னுடைய அலுவலகத்துக்கு வரவழைத்து வெகுவாக பாராட்டி, பாராட்டு சான்றிதழை வழங்கினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.