Skip to main content

காவலர் குடியிருப்பில் கழிவுநீர் அகற்றும் போது விஷவாயு தாக்கி 2 பேர் மயக்கம்!

Published on 19/07/2018 | Edited on 19/07/2018
scavangers-in-India-2-


காவலர் குடியிருப்பில் கழிவுநீர் அகற்றும் போது விஷவாயு தாக்கி 2 பேர் மயக்கமடைந்த சம்பவம் ஆயிரம் விளக்கு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் நேற்று மதியம் கழிவுநீர் அகற்றும் பணி நடந்தது. இந்த பணியில் திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெருவை சேர்ந்த தாஸ் (65) மற்றும் குமார் (55) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். கழிவுநீர் அடைப்பை எடுப்பதற்காக இருவரும் கால்வாயில் இறங்கினர். உள்ளே சென்ற சிறிது நேரத்தில் இருவரும் மயங்கினர். இதை பார்த்த காவலர் குடியிருப்பை சேர்ந்த காவலர்கள் உடனே எழும்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அதன்படி, விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்பு உபகரணங்களுடன் கழிவுநீர் கால்வாயில் இறங்கி இருவரையும் மீட்டனர். பின்னர் இருவரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருவரையும் உரிய நேரத்தில் மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதால் உயிர் பிழைத்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் காவலர் குடியிருப்பில் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

மனிதனின் மலத்தை மனிதனே அள்ளுவது அவமானத்திற்கு உரியச்செயல். இது சட்டத்திற்கு விரோதமானது என 1993 ஆம் ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டது. மனிதனின் மலத்தை மனிதனே அள்ளுவதும், சுத்தம் செய்வதும் போன்ற வேலைகளை செய்யவைத்தால் பிரிவு 8-ன் கீழ் இரண்டாண்டு சிறைத்தண்டனையும் 2 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

அந்தப் பணியில் இறந்துபோனால் பிரிவு-9-ன் கீழ் 5-ஆண்டு சிறைத்தண்டனையும், 5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்படி இருக்கும் போது காவலர் குடியிருப்பிலே இப்படி மனிதர்களை எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கழிவுநீர் அகற்றும் பணிக்கு கால்வாயில் இறக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்