
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் மாணவர் ஒருவருக்கு மருத்துவ பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதிச்செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, கரோனா உறுதியான மாணவருடன் விடுதி அறையில் தங்கியிருந்த இரண்டு மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவருடன் பழகிய மற்ற மாணவர்களுக்கும் கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்படவுள்ளது.
ஏற்கனவே சென்னை ஐ.ஐ.டி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதிச் செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், மருத்துவக் கல்லூரி மாணவருக்கு கரோனா கண்டறியப்பட்டது மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்தாலும் மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.