Skip to main content

‘உயிர் பொழச்சா போதும்..’ - மிதக்கும் சீர்காழி; வெளியேறும் மக்கள்

Published on 12/11/2022 | Edited on 12/11/2022

 

காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிகக் கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை 5 மணியிலிருந்து இரவு 12 மணி வரை தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கிராமம் மற்றும் நகர்ப் பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வெள்ள நீரானது சூழ்ந்தது.

 

தொடர்ந்து பெய்த மழையில் சீர்காழியில் 44 சென்டிமீட்டர் மழையும், கொள்ளிடத்தில் 31 சென்டிமீட்டர் மழையும், செம்பனார்கோவில் பகுதியில் 24 சென்டிமீட்டர் மழையும், பொறையாறு பகுதியில் 18 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறையில் பல இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி காணப்படுகிறது.

 

குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள சூரக்காடு பகுதியில் கிட்டத்தட்ட 300 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது. இப்பகுதி உப்பனாற்றின் கரையோரம் உள்ள பகுதியாகும். இடுப்பளவு தண்ணீரில் கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். சீர்காழி பகுதியில் மட்டும் 35 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மாவட்ட நிர்வாகம் சார்பில் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் நிவாரண மையத்தை நோக்கிச் சென்று வருகின்றனர்.  இந்த வெள்ளம் காரணமாக அந்தப் பகுதியில் மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.