
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியை சேர்ந்தவர் தென்னவன் (25). இவர் சென்னை பூந்தமல்லியில் தங்கி அண்ணா நகரில் உள்ள பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படித்து வந்தார். இவருக்கும், சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த அஸ்வினி (20) என்ற மாணவிக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த மே மாதம் 3-ந் தேதி அஸ்வினி வீட்டில் அனைவரும் கேரளாவுக்கு சென்று விட்டனர். அஸ்வினி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனால் அஸ்வினி காதலன் தென்னவனை தன் வீட்டுக்கு வரவழைத்துள்ளார். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. அந்த சமயத்தில் தென்னவனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். காதலன் இறந்த துக்கத்தில் மனம் உடைந்து காணப்பட்ட அஸ்வினியை திருவொற்றியூர் சக்திபுரத்தில் உள்ள உறவினர் ராமச்சந்திரன் என்பவரது வீட்டில் பெற்றோர் தங்க வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராமச்சந்திரன் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று விட்டு திரும்பியபோது, அஸ்வினி தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்த அஸ்வினியை கீழே இறக்கி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.