
வில்வித்தை பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ. 5 லட்சத்திற்கான காசோலை ஷிஹான் ஹுசைனிக்கு வழங்கப்பட்டது.
இது தொடர்பாகத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் நவீன வில்வித்தை வீரர்களை உருவாக்கி ஷிஹான் ஹுசைனி இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் வில்வித்தைக்குப் பெறும் பங்களிப்பு செய்து வருகிறார். இவர் 400க்கு மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்குப் பயிற்சி அளித்தும், தமிழ்நாட்டில் நவீன வில்வித்தைக்கு முன்னோடியாக இருந்து ரீகர் வில் (1979) மற்றும் காம்பவுண்ட் வில் (1980) ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். நவீன வில்வித்தை பயிற்சி பாடத்திட்டத்தை வடிவமைத்து, மேம்பாட்டிற்கான தரங்களை வடிவமைத்தார்.
இந்தியாவின் முன்னணி வில்வித்தை வீரர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார். தற்போது ஹுசைனியின் நேரடி பயிற்சியின் கீழ் மொத்தம் 100 வில்வித்தை வீரர்கள் மற்றும் 300 பயிற்சியாளர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். ஹுசைனியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவச் சிகிச்சை பெறுவதற்குத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.