Skip to main content

குற்றால விடுதி! கல்லூரி மாணவியுடன் தங்கிய மாணவர் மர்ம மரணம்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

Published on 04/02/2019 | Edited on 04/02/2019

 

nn

 


திருப்பூர் மாவட்டத்தின் குத்தகம் புள்ளியம்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் ஆம்னி பஸ் டிரைவர். இவரது இரண்டாவது மகன் கார்த்திக் ராஜா (18). இவர் அங்குள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக் பிரிவின் முதலாமாண்டு படித்து வருகிறார். இக்கல்லூரி சாலையின் மறுபுறம் உள்ள கலை கலூரியில் பயின்று வரும் சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவியோடு கார்த்திக் ராஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டு, பின் அது காதலாகியிருக்கிறது. இருவரும் இருவேறு சமூகம் சார்ந்தவர்கள். இவர்களின் காதல் விவகாரம் இருவரது வீட்டிற்கும் தெரியவர எதிர்ப்பு புயல் அடித்திருக்கிறது.  அவர்களை இருவீட்டாரும் எச்சரித்துள்ளனர். ஆனாலும் அதனை பொருட்படுத்தாமல் இவர்களின் காதல் தொடர்ந்திருக்கிறது. 


இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர்கள் இருவரும் கல்லூரி செல்லுவதாக சொல்லிவிட்டு, அங்கிருந்து கேரளாவின் பாலக்காடு, எர்ணாகுளம், கொச்சி என்று பல இடங்களுக்கு சுற்றிவிட்டு பிப்ரவரி 2 அன்று நெல்லை மாவட்டத்தின் குற்றாலம் வந்தவர்கள், அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியுள்ளனர். மறுநாள் மதியம், கார்த்திக்ராஜா மர்மமான முறையில் இறந்து கிடந்திருக்கிறார். ஆனால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக அவரது காதலி சுதா தெரிவித்திருக்கிறார். எனினும் தகவல் அறிந்த குற்றாலம் காவல்நிலைய கிரைம் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். 


காதலி சுதாவிடம் போலீஸ் நடத்திய விசாரணையில், மதியம் கார்த்திக்ராஜா தன் செல்லில் சுதாவை படம் பிடித்தபோது தங்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும், ஆத்திரமான சுதா அந்த செல்போனை பறித்து, அதிலுள்ள காட்சிகளை டெலிட் செய்துவிட்டு தூங்கிவிட்டாராம். பின்னர் பார்த்தபோது. கார்த்திக்ராஜா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது என்று தெரிவித்திருக்கிறார் என்கிறார்கள் போலீஸ் தரப்பினர். ஆனால், மாணவரின் உறவினர்களோ, நேற்று முன் தினம் இரவுதான் போன் மூலம் கார்த்திக்ராஜா இறந்துவிட்டதாக போலீசார் கூறினர். ஆனால், சம்பவம் மாலை 4 மணிக்கு நடந்திருக்கிறது. எங்களுக்கு அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என்கிறார்கள். 

 


இதற்கிடையே உடற்கூறு ஆய்வில், மூச்சுத்திணறலே மரணத்திற்கு காரணமென தெரியவருகிறது. காதலி சுதா, தான் முன்பு சொன்ன தகவலுக்கு பின்னர் வேறு ஏதும் சொல்லவில்லை. சொன்னதையே சொல்லுகிறார். ஆனால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அவரின் உடல், கிடத்தப்பட்ட நிலையில்தான் போலீசார் பார்த்திருக்கின்றனர். அதற்கு அந்த, உடலை நான்தான் இறக்கினேன் என்கிறார் சுதா. அது ஒருவரால் ஆகக்கூடிய காரியம் இல்லை. வேறு ஒருவர் சம்மந்தமும் இருக்கலாம். எனவே அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது. அது கொலையா அல்லது தற்கொலையா என்பது எங்களின் தொடர் விசாரணைக்கு பின்னர் தெரியவரும் என்கின்றனர் போலீஸ் தரப்பினர். இந்த சம்பவத்தால் குற்றாலத்தில் பரபரப்பு நிலவுகிறது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்