Skip to main content

25 வழக்குகளில் தொடர்புடைய பிரபல கார் திருடன் மீது 'குண்டாஸ்' பாய்ந்தது!

Published on 24/11/2018 | Edited on 24/11/2018

சேலத்தில் பிரபல கார் கொள்ளையனை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


சேலம் அஸ்தம்பட்டி பள்ளக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மாது. இவருடைய மகன் பூபதி என்கிற மைக்கண் பூபதி (32). கடந்த 2017ம் ஆண்டு, கொண்டலாம்பட்டி அருகே ஒரு கார் ஷெட்டில் பணியில் இருந்த இரவுக்காவலரை தாக்கிவிட்டு, அங்கிருந்த ஸ்கார்ப்பியோ, குவாலிஸ் ஆகிய இரண்டு கார்களை கூட்டாளிகளுடன் சேர்ந்து திருடிச் சென்றார்.

 

car theft


இச்சம்பவம் நடந்த சில நாள்களில் அதே பகுதியில் ஒருவரிடம் கத்திமுனையில் 2000 ரூபாய் பறித்தார். இது தொடர்பான வழக்குகளில் பூபதி, கூட்டாளிகள் முகைதீன் அப்துல் காதர், கோபாலகிருஷ்ணன், கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் திருடிச்சென்ற கார்களும் மீட்கப்பட்டன.


பின்னர் ஜாமினில் வெளியே வந்த பூபதி, மீண்டும் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு கடந்த ஜூலை மாதம் கடலூர் மாவட்டம் முத்தாண்டிகுப்பத்தில் இரண்டு கார்களை திருடினார். இந்த வழக்கிலும் பூபதியும், திருவண்ணாமலையைச் சேர்ந்த காளியப்பன் என்பவரையும் கடலூர் போலீசார் கைது செய்தனர். 


அந்த வழக்கிலும் ஜாமினில் வெளியே வந்த பூபதி, கடந்த 30.10.2018ம் தேதியன்று, சேலம் சொர்ணபுரி பகுதியில் ராமராஜ் என்பவரிடம் கத்தி முனையில் 1060 ரூபாயை வழிப்பறி செய்தார். 


மீண்டும் அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட வந்த பூபதியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க அழகாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர், குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கருக்கு பரிந்துரை செய்தனர். அவருடைய உத்தரவின்பேரில் பூபதியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 


கைதான பூபதி என்கிற மைக்கண் பூபதி மீது சேலம் மாநகர, சேலம் மாவட்டம், நாமக்கல், கடலூர் மாவட்டங்களில் 23 திருட்டு உள்பட மொத்தம் 25 வழக்குகள் உள்ளன என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

விபத்தில் சிக்கி உயிரிழந்த காவலரின் கண்கள் தானம்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Eye donation of a policeman who passed away in a two-wheeler accident

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை, இவர் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 28  ஆம் தேதி இரவு அண்ணாமலை தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் நாட்றம்பள்ளி நோக்கிச்சென்று கொண்டிருந்த போது, கல்லாறு என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோர  தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் அண்ணாமலையும் மற்றும் அவரது நண்பரும் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பலனளிக்காமல் அண்ணாமலை 29 ஆம் தேதி மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவலர் அண்ணாமலையின் கண்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார்.