
இந்தியாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ், தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 527 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வரும் நிலையிலும், கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பது அரசுகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. ஊரடங்கு பிறப்பித்து, சமூக இடைவெளியை முறையாக கடைபிடியுங்கள் என்று வலியுறுத்திய போதிலும், 30% மக்கள் அதை அலட்சியம் செய்தது, தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்வதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் ஊரடங்கு நேரத்தில், கோயம்பேடு மார்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியதின் எதிரொலியாக, சென்னை கோயம்பேடு மார்கெட்டுடன் தொடர்புடையவர்களுக்கு தொடர்ந்து கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோயம்பேடு மார்கெட்டில் இருந்து சென்றவர்கள் மூலம் விழுப்புரத்தில் இன்று 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாக கோயம்பேடு மார்கெட் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 111ஆக உயர்ந்துள்ளது.