Skip to main content

யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது... சிபிஎம் எம்பிக்கு கோபத்தை ஏற்படுத்திய கல்வெட்டு...!

Published on 10/03/2020 | Edited on 10/03/2020

கடலூர் திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கே.டி.ரங்கராஜனின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 43 லட்சத்தில் இரண்டு மாடிகளில் ஆய்வுக்கூட கட்டிடம் கட்டப்பட்டது.  இந்த கட்டிடத்தை மார்ச் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை டி.கே.ரங்கராஜன் திறந்து வைப்பதற்காக பள்ளியின் சார்பில் திறப்பு விழா நிகழ்ச்சி மிக எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  பள்ளியின் தலைமை ஆசிரியர் தேன்மொழி  தலைமையில் நடைபெற்ற  நிகழ்ச்சியில்  கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், உள்ளிட்ட  கட்சியினருடன் கட்டிடத்தின் வாயிலில் ரிப்பனை வெட்டி உள்ளே சென்று பார்த்த எம்பி உள்ளிட்ட அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

 

Inscription that angered CPM MP ...!

 



அது என்னவென்றால்,  இந்த கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி  ஜனவரி மாதம் 6 ஆம் தேதி திறந்து வைத்ததாக மாநில அரசு சார்பில் கல்வெட்டு பொறிக்கப்பட்டு பள்ளியின் சுவற்றில் வைக்கப்பட்டிருந்தது.  இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் டி.கே.ரங்கராஜன் கேட்டதற்கு, அதிகாரிகள் ஏற்கனவே வந்து கல்வெட்டை பதித்து விட்டு சென்று விட்டார்கள் என்று கூறியுள்ளார். 

இதையடுத்து பேசிய கே.டி.ரங்கராஜன் “அனைவருக்கும் கல்வி, வேலை என்ற முழக்கத்தை முன்வைத்துத்தான் தொகுதி நிதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான் திருவந்திபுரம் அரசுப் பள்ளிக்கு ரூ. 43 லட்சம் ஒதுக்கீடு செய்து கட்டடங்கள் கட்டிக்கொடுக்கப்பட்டது. இந்த கட்டிடத்தையும், பொருட்களையும் மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த நிதி என்னுடைய சொந்த நிதி கிடையாது, உங்களுடைய வரிப்பணம். இந்த கட்டடத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு பகுதி கமிஷனாக கரைந்துள்ளது. இப்படி சொல்வதால் கடலூர் மாவட்ட ஆட்சியர் வருத்தப்பட்டாலும் பரவாயில்லை” என்றார். மேலும் கல்வித்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளின் இந்த செயலை எம்பி உள்ளிட்ட அனைவரும் கட்டிட திறப்பு விழாவில் கண்டித்தனர்.  மாவட்ட ஆட்சியருக்கு நிகழ்ச்சியில் கண்டனம் தெரிவித்து, அவருக்கு கடிதம் எழுதுவதாக டி.கே. ரங்கராஜன் பேசினார். 

 



அரசின் இந்த செயல்பாடுகள் அங்கிருந்த பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மாணவர்களுக்கு முகசுளிப்பை ஏற்படுத்தியது.  மாநிலங்களவை உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் கல்வி வளர்ச்சிக்காகவும், மாணவர்களின் முன்னேற்றத்திற்காகவும் கட்டப்பட்ட கட்டிடத்தை நிதி ஒதுக்கீடு செய்த சம்பந்தப்பட்ட மாநிலங்களை உறுப்பினருக்கு தெரிவிக்காமல் திறந்து வைத்தது சரியான நடைமுறையில்லை என்பது ஒருபுறம் என்றாலும், தமிழக அரசின் சார்பில் வைக்கப்பட்ட கல்வெட்டில் முதலமைச்சர் பெயர் மட்டுமே உள்ளது. எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? எந்த திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது? யார் நிதி ஒதுக்கியது? என்ற எந்த விவரமும் அதில் இல்லை.  

இதைப் பார்த்து, நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் திரைப்படம் ஒன்றில் இனிசியலுக்காக இவர் இருக்கிறார் என்று வரும் காமெடிபோல் இந்நிகழ்வு இருக்கிறது என்று சிரித்த படியே சென்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கேட்கும் நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுப்பதில்லை” - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 EPS alleges Centre government never gives the requested funds

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிக வெப்பம் காரணமாக அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் பல இடங்களில் நீர் மோர் பந்தலை வைக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 4 இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து செய்தியாளர்களைச் சந்தித்துp பேசினார்.

அப்போது அவர், “தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்ட போதிலும் நிதியைக் குறைத்து தான் வழங்கினார்கள். திமுக மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதே கூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை. குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலிருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6,000 தூர்வாரப்பட்டன. தமிழகத்தில் போதைப்பொருளால் சமுதாயம் மிக மோசமான அழிவுக்குச் சென்று கொண்டிருக்கிறது ” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.