
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். மீனவர்களின் விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்வதால், மீனவர்களின் வாழ்வாதாரதமும் பாதிப்படைந்து வருகிறது. மீனவர்களை விடுவிக்க கோரி இலங்கை அரசுக்கு, மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலில் தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகிறார். ஆனாலும், இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை தொடர்ந்து கொண்டே வருகிறது.
இந்த சூழ்நிலையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் உரிய அனுமதிச் சீட்டு பெற்று 550க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுடன் நேற்று முன் தினம் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். மீனவர்கள், நேற்று அதிகாலை 2 மணியளவில் தனுஷ்கோடிக்கும், வடக்கு மன்னார் கடற்பரப்புக்கும் இடையே கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் 32 பேரை கைது செய்தனர். அதோடு மீனவர்களின் 5 விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசுக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில், மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (24-02-25) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 700க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் படகுகளைக் கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.