நெல்லை நகரம் 1999 போது கலைஞர் ஆட்சியில் நெல்லை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது மேயர் பதவி மட்டும் தனி பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டது. அப்போது நெல்லை முதல் பெண் மேயராக உமாமகேஸ்வரி தேர்தெடுக்கப்பட்டார். அதன்பின் பதவிமுடிவுக்கு பின்பு அவர் கட்சிப் பணிகளை மேற்கொண்டு வந்தார்.

அண்மைக்காலமாக அவர் வயது காரணமாக கட்சி பணிகளில் ஓரளவுதான் ஈடுபட்டுவந்தார். இவரது வீடு நெல்லை நாகர்கோவில் சாலையில் பொறியியல் கல்லூரி அருகில் உள்ள ரெட்டியார்புரத்தில் உள்ளது. இவரது கணவர் முருகசந்திரன் நெடுஞ்சாலைத்துறையில் ஏடியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். உமா மகேஸ்வரி அவரது கணவர் மற்றும் அவர்கள் வீட்டில் இருந்த தனிப்பெண் உதவியாளர் மாரி, மூவரும் இன்று வீட்டில் இருந்துள்ளனர். மதியம் நேரம் வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று மூவரையும் வெட்டிக்கொன்ற தகவல் கிடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் உட்பட அனைத்து போலீசாரும் அங்கு விரைந்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் மூவரும் இறந்து கிடந்தனர். தடயவியல் துறையினரும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கொலை நகைக்காகவா அல்லது ரியல் எஸ்டேட் தொழில் காரணமாகவா என்று போலீசாரின் சோதனை முடிந்த பிறகே மேலும் தகவல்கள் தெரியவரும் என்கிறது போலீஸ் வட்டாரம். இந்த மூவர் கொலையால் நெல்லையில் பரபரப்பு தொற்றியுள்ளது. போலீசார் இந்த கொலை வழக்கு தொடர்பாக மூன்று தனிப்படை அமைத்து விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.