Skip to main content

போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி நிர்வாகி உள்பட 2 பேர் கைது!

Published on 28/06/2021 | Edited on 28/06/2021

 

chella.jpg

 

சேலத்தில் காவல்துறையினரைப் பார்த்து ‘சங்க அறுத்துடுவேன்’ என்று கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

 

சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே கொண்டலாம்பட்டி காவல் நிலைய காவல்துறையினர் சோதனைச்சாவடி அமைத்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த 25ஆம் தேதி மாலையில் அந்த வழியாக, இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணியாமல் வந்த முரளி என்பவருக்கு காவல்துறையினர் 200 ரூபாய் அபராதம் விதித்தனர். 

 

அந்த இளைஞர் இதுகுறித்து, இந்து முன்னணி அமைப்பின் சூரமங்கலம் பகுதி பொறுப்பாளராக இருந்துவந்த செல்லபாண்டியனிடம் முறையிட்டுள்ளார். அதன்பேரில் செல்லபாண்டியன், தனது நண்பர் தமிழரசன் என்பவருடன் கொண்டலாம்பட்டி சோதனைச்சாவடிக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்தார். அவர், அங்கு பணியில் இருந்த சிறப்பு எஸ்ஐ வில்லியம் ஜேம்ஸ் உள்ளிட்ட காவலர்களிடம் தகராறில் ஈடுபட்டார். 

 

அப்போது, காவல்துறையினரை ஒருமையில் ஆபாசமாகப் பேசியதோடு, ‘சங்கை அறுத்துடுவேன்’, ‘செக்போஸ்ட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்திடுவேன்’ என்றும் கொலை மிரட்டல் விடுத்தார். திடீரென்று அவர், வில்லியம் ஜேம்ஸை அடிக்கவும் பாய்ந்தார். மேலும், “நீ இந்து முன்னணிகாரன் மேலயே வழக்குப் போடுவியா... நீ இந்துவா? கிறிஸ்தவனா?” என்று கேட்டும் தகராறில் ஈடுபட்டார். 

 

பின்னர் மற்ற காவலர்கள் அங்கு வந்து அவரை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்துள்ளனர். செல்லபாண்டியன், காவல்துறையினரை உருட்டி மிரட்டிய செல்ஃபோன் வீடியோ காட்சிகள், அனைத்து சமூக ஊடகங்களிலும் வேகமாகப் பரவின.  

 

இதுகுறித்து எஸ்எஸ்ஐ வில்லியம் ஜேம்ஸ், கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் செல்லபாண்டியன் (48), உடன் வந்த அவருடைய நண்பர் தமிழரசன் (23) ஆகியோர் மீது அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபாசமாகப் பேசுதல், கொலை மிரட்டல், மத உணர்வைத் தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையே அவர்கள் இருவரும் திடீரென்று தலைமறைவாவிட்டனர். 

 

santhosh.jpg

 

அவர்களைப் பிடிக்க காவல் ஆய்வாளர் தனசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், அவர்கள் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் தனிப்படையினர் அங்கு விரைந்து சென்றனர். இருவரையும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27) காலை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.  

 

விசாரணையில் செல்லபாண்டியன், சேலம் பள்ளப்பட்டி முனியப்பன் கோயில் தெருவில் குடும்பத்துடன் வசித்துவருவதும், இந்து முன்னணி அமைப்பில் கடந்த 10 மாதத்திற்கு முன்பு சேர்ந்து பணியாற்றிவருவதும் தெரியவந்தது. பிடிபட்ட மற்றொருவரான தமிழரசன், கொண்டலாம்பட்டி மேட்டு வெள்ளாளர் தெருவில் வசிப்பதும், கந்துவட்டி தொழில் செய்துவருவதும், செல்லபாண்டியன் ஆதரவாளர் என்பதும் தெரியவந்தது.  

 

இருவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவு இன்று தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவர்களைச் சிறையில் அடைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.  

 

இது ஒருபுறம் இருக்க, செல்லபாண்டியன் இந்து முன்னணி அமைப்பின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் சேலம் கோட்டத் தலைவர் சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரெய்டில் சிக்கிய பிக் பாஸ் டைட்டில் வின்னர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
big boss 17 title winner Munawar Faruqui arrested

சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த முனாவர் பரூக்கி, ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும் ராப் படகராகவும் பிரபலமானார். இவர் 2021 ஆம் ஆண்டில், ஒரு ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியின் போது இந்து கடவுள்களை பற்றி கருத்து தெரிவித்த நிலையில், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வலது சாரி அமைப்புகளின் அச்சுறுத்தல்களால் தான் நகைச்சுவை துறையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமலிருந்த முனாவர் பரூக்கி, 2022 ஆம் ஆண்டு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து அதன் முதல் சீசனில் வெற்றி பெற்றார். மேலும் இந்தி பிக் பாஸ் சீசன் 17ல் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

big boss 17 title winner Munawar Faruqui arrested

இந்த நிலையில், ஹூக்காவில் புகையிலை தொடர்பான காவல்துறையினர் சோதனையில் முனாவர் பரூக்கி கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மும்பையில் உள்ள கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லரில் மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பாருக்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இரவு 10.30 மணியளவில் தொடங்கிய அந்த சோதனை இன்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்துள்ளது. 

இந்த சோதனையில் மொத்தம் ரூ. 4,400 ரொக்கம் மற்றும் ரூ.13,500 மதிப்புள்ள 9 ஹூக்கா பானைகள் பறிமுதல் செய்தனர். அந்த சோதனையின் போது 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பிக் பாஸ் 17 டைட்டில் வின்னர் முனாவர் பரூக்கியும் ஒருவர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முனாவர் பரூக்கியிடம், ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டு பின்பு காவல்துறையினர் விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு சற்று பரப்பரப்பை ஏற்படுத்தியது. 

Next Story

நில உட்பிரிவு மாற்ற லஞ்சம்; நில அளவையாளர் கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
3000 bribe to change land subdivision; Land surveyor arrested

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் அலுவலகத்தில் நில அளவையாளராக பணியாற்றி வருபவர் 26 வயதான இளைஞர் அரவிந்த். அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சுதாகர் (43) வாலாஜா வட்டத்திற்குட்பட்ட செங்காடு கிராமத்தில் வீட்டு மனை வாங்கி கடந்த 9.2.2024 ஆம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளார். அந்த வீட்டுமனையை உட்பிரிவு செய்வதற்காக நில அளவையாளர் அரவிந்தை அணுகியுள்ளார். அப்பொழுது அரவிந்த் வீட்டு மனையை உட்பிரிவு செய்து மாற்ற ஐந்தாயிரம் கேட்டதாகத் தெரிகிறது. அதன் பின் 3 ஆயிரம் கொடுப்பதாக ஜெயராமன் ஒத்துக் கொண்டு வந்துள்ளார்.

வீட்டு மனை பத்திரப்பதிவு செய்யும்போதே உட்பிரிவு செய்வதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்தியுள்ளனர். அப்படியிருந்தும் தனக்கு 5 ஆயிரம் லஞ்சம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். பணம் தந்தால்தான் அளவீடு செய்து பெயர் மாற்றித் தருவேன் என்றுள்ளார். வயது வித்தியாசம் பார்க்காமல் தன்னை அலுவல் ரீதியாக சந்திக்க வரும் பொதுமக்களை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. சுதாகரையும் அப்படி பேசியதால் கடுப்பாகியுள்ளார்.

இதனால் மார்ச் 25 ஆம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் தந்துள்ளார். புகாரைப் பதிவு செய்துகொண்டு 3 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை தந்து அனுப்பியுள்ளனர். அந்த பணத்தை அவரும் கொண்டு சென்று வழங்கியுள்ளார். அதை வாங்கி அவர் தனது பாக்கெட்டில் வைத்ததை உறுதி செய்து கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.