Skip to main content

ஆபாச வலைத்தளங்களில் நுழைய முடியாதபடி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்! -ஆன்லைன் கல்வி தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 01/09/2020 | Edited on 01/09/2020

 

highcourt chennai

 

ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை கோரியும், மாணவர்களின் உடல் நலனை உறுதி செய்யக்கோரியும் தொடரப்பட்ட வழக்குகள் கடந்த முறை  விசாரணைக்கு வந்தபோது,  தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு விதிமுறைகள் எவ்வாறு பின்பற்றப்படுகிறது? மலைப்பகுதி மாணவர்களுக்கு எப்படி கல்வி வழங்கப் போகிறார்கள்? தனியார் பள்ளிகள் முன்கூட்டியே பதிவு செய்து வகுப்புகளை நடத்துகின்றனவா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

 

இந்த வழக்குகள், நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்கறிஞர், ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக வழிகாட்டு விதிமுறைகள் அமல்படுத்துவது தொடர்பாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர், அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.  விதிமுறைகளை மீறும் பள்ளிகளுக்கு எதிராகப் புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.  மேலும், முன்கூட்டியே பதிவு செய்த வகுப்புகள் சம்பந்தமாக,  சம்பந்தப்பட்ட பள்ளிகள்தான் முடிவெடுக்க வேண்டும்.  மலைவாழ் மாணவர்களுக்கு, தொலைக்காட்சி மூலமாக கல்வி வழங்கப்படுகிறது.  தனியார் தொலைக்காட்சிகள் மூலமாகவும் கல்வி கற்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.


மாணவர்களின் நலனில் அனைவருக்கும் பொறுப்பு உண்டு,  ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான  வழிகாட்டு விதிமுறைகளை பள்ளிகள் பின்பற்றுகிறதா என்பதைக் கண்காணிக்க அமைப்பை உருவாக்க வேண்டும். மாணவர்கள்,  ஆபாச இணையதளங்களுக்குள் நுழைய முடியாதபடி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள்,  இந்த வழக்குகளின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்