ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சியும் கருத்தரங்கமும் நடைபெற்றது. எட்டாம் வகுப்பு மாணவி அ.மெஹர்நிஷா அனைவரையும் வரவேற்றார். கருத்தரங்கத்துக்கு தலைமை வகித்து புகைப்படக் கண்காட்சியை தலைமையாசிரியர் ரெ.புரூணா ரெத்னகுமாரி தொடங்கி வைத்தார்.
மன்றச் செயலரும் தொல்லியல் ஆய்வாளருமான வே. ராஜகுரு பேசும்போது, “மாணவர்களிடையே பன்முகம் கொண்ட வளமான நமது பண்பாட்டினைக் கொண்டு சேர்த்திட, தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களை செயல்படுத்திட தமிழ்நாடு முழுவதும் 119 பள்ளிகளுக்கு ஒரு பள்ளிக்கு ஆண்டுக்கு ரூ.10,000/- வீதமும், 37 கல்லூரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.20,000/- வீதமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்களுக்கு கட்டுரை போட்டி, பேச்சுப் போட்டி, தொல்லியல் பயிற்சி, களப்பணி, சுற்றுலா ஆகிய செயல்பாடுகள் நடைபெற உள்ளன” என்றார்.
கருத்தரங்கத்தில் பல்லவர் கட்டடக் கலை பற்றி ரா.பைரோஸ், சேதுபதி கட்டடக் கலை பற்றி மு.சத்தீஸ்வரி, பாண்டியர் கட்டடக் கலை பற்றி அ.முகம்மது சகாபுதீன், மாடக் கோயில்கள் பற்றி பூ.பூஜா ஶ்ரீ, சிற்பக் கலை பற்றி சா.சுபா, ஓவியக் கலை பற்றி பா.ஶ்ரீதன்வி, விஜயநகர கட்டடக் கலை பற்றி ஶ்ரீ ஐஸ்வர்யா, சோழர் கட்டடக் கலை பற்றி அல்ஷிஹா ஆகியோர் பேசினர். ஒன்பதாம் வகுப்பு மாணவன் சு. ஶ்ரீவிபின் நன்றி கூறினார். மை.சப்ரன் அஃப்ரா மற்றும் அ.ஐனுன் ரிப்கா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். கண்காட்சியில் கட்டடக் கலைச் சிறப்பு மிக்க குடைவரை, கற்கோயில்கள், அரண்மனை, ஓவியங்களின் படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.