Skip to main content

“சட்டம் தடுக்காவிட்டாலும்; நாம் தடுக்க வேண்டும்” - திருமாவளவன் எம்.பி.

Published on 17/07/2023 | Edited on 17/07/2023

 

“Even if the law does not prevent; We must prevent it” - Thirumavalavan MP.

 

போதைக்கு  எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் 1 கோடி கையெழுத்து  இயக்கம் தொடங்கி நடைபெற்றது. இதன் இறுதி விழா நேற்று(16ந் தேதி) சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இதில்  விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, அமைச்சர் ம.சுப்பிரமணியன், வி.சி.க. தலைவரும், எம்.பியுமான தொல் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், நக்கீரன் ஆசிரியர், சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கோபி நயினார், திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

 

இதில் பேசிய வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன், “தமிழ்நாடு மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவும் போதை இல்லாத நாடக மாற வேண்டும். போதை இல்லாத சமூகமாக மாற வேண்டும் என்பது ஒவ்வொருக்குமான கடமையாக உள்ளது.

 

மாநில அரசும், மத்திய அரசும் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தை இயற்றுகிறார்கள். ஆனால் போதைப் பொருள் புழுக்கத்தில் இருப்பதைத் தடுக்க முடியவில்லை. மது, புகை இலை பொருட்களின் மீது எச்சரிக்கை வாசகங்களைப் பதிவு செய்தும் விற்பனை நடைபெறுகிறது. திரைப்படங்களில் அந்த காட்சியை அமைக்கக் கூடாது. ஆனால் மது நாட்டுக்கு வீட்டுக்கு கேடு என்ற வாசகத்தை போட்டுக் கொண்டால் மது பயன்பாடு காட்சிகளை காட்டலாம் என்ற விதிவிலக்கு இருக்கிறது. இப்படிப்பட்ட சமரச போக்கு மேல் இருந்து கீழ் வரை உள்ளது. தடுப்பதற்கு சட்டங்கள் இருந்தும் அதை தடுக்க முடியவில்லை.

 

அரசு ஏன் மதுக்கடைகளை திறக்க வேண்டும் அதை மூடுவது தான் சரி என்று விவாதித்தால், அரசு மதுக்கடைகளை மூடினால் கள்ளச் சாராயம் பெருகும், உயிரிழப்பு ஏற்படும். அதில் இருந்து காப்பற்றத் தான் மதுக்கடைகளை திறக்கிறது என்ற நியாயம் சொல்லப்படுகிறது. 

 

ஒரு மாநிலத்தில் மட்டும் மது விளக்குக் கொள்கை அல்லது போதை விளக்கக் கொள்கை நடைமுறையில் இருந்தால் அதை அந்த மாநிலத்தில் நீட்டிக்க முடியாது. அது சிக்கலுக்கு உள்ளாகும். இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் அது நடைமுறைக்கு வர வேண்டும். ஆனால் இந்திய ஆட்சியாளர்கள், உலகளாவிய அளவில் தடுத்தால் தான் இந்தியாவில் தடுக்க முடியும் என்று சொல்வார்கள். போதைப் பொருள் வியாபாரம் என்பது உலகளாவிய மாபியாக்கள் கையில் உள்ளது. அனைத்தையும் அழித்து ஒழிக்க வேண்டும். 

 

இன்று இளம் தலைமுறையினர் போதைப் பொருளால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். அதை கட்டுப்படுத்த முடியவில்லை நிறைய பேர் திருமணம் செய்ய முடியாமல் குடும்பத்தை விட்டு விலகி இருக்கும் சூழல் உள்ளது. அனைத்து வகை போதைப் பொருள் பழக்கத்தில் இருந்தும் மக்கள் மற்றும் இளைஞர்களை காப்பாற்ற வேண்டும். 

 

1 கோடி கையெழுத்து கோரிக்கையை முதல்வரிடம் கொடுக்க உள்ளது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். கோரிக்கையை நிறைவேற்ற கோரிக்கை வைக்க உள்ளது. அரசு செய்கிறதோ இல்லையோ நாம் செய்தாக வேண்டும். சட்டம் தடுக்கிறதோ இல்லையோ நாம் தடுத்தாக வேண்டும். ஊழலை விட சமூகத்தை பயங்கரமாக பாதிக்ககூடியவை ஒன்று சாதி. அதை ஒழித்தாக்க வேண்டும். அதேபோல் போதை; அதை முற்றிலும் அழிக்க வேண்டும்” என பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
vck president thirumavalavan anoounced 20204 ambedkar sudar award to prakash raj

பிரகாஷ் ராஜ், நடிப்பைத் தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என மற்ற தளங்களிலும் பயணித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறித்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் ஏழு கட்ட வாக்குப்பதிவில், இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. அந்த வகையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது, பெங்களூருவில் வாக்களித்த பிரகாஷ் ராஜ், மாற்றத்திற்காக மற்றும் வெறுப்பிற்கு எதிராக வாக்களித்ததாக கூறினார். 

இந்த நிலையில் வி.சி.க. சார்பில் பிரகாஷ் ராஜுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வி.சி.க. சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சிறப்பாக தொண்டாற்றும் நபர்களுக்கு, ‘அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு’ ஆகிய பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 

2007ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், 2024ஆம் ஆண்டிற்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருதை பிரகாஷ்ராஜுக்கு வழங்குவதாக வி.சி.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வி.சி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவர் பிரகாஷ்ராஜ்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விருதுகள் அடுத்த மாதம் 25ஆம் தேதி, (25.05.2024) சென்னையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது திருமாவளவனும்,பிரகாஷ் ராஜும் சந்திப்பு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது சி.பி.ஐ. (எம்.எல்) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யாவிற்கு வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.  

Next Story

2024 ஆம் ஆண்டிற்கான விசிக விருதுகள் அறிவிப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
2024 Vck Awards Announcement!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமையினருக்கு, “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு” ஆகிய விருதுகள் 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு முதல் ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேனாள் கர்நாடக முதலமைச்சர் சித்தாரமையா, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் து.ராஜா, இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ். பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்டோருக்கு  இதுவரை விசிக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான விசிக - விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் அம்பேத்கர் சுடர் விருது - நடிகர் பிரகாஷ்ராஜ், பெரியார் ஒளி விருது - வழக்கறிஞரும், திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளருமான அருள்மொழி, மார்க்ஸ் மாமணி விருது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், காமராசர் கதிர் விருது - இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், அயோத்திதாசர் ஆதவன் விருது - பேராசிரியர் ராஜ்கௌதமன், காயிதேமில்லத் பிறை விருது - வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவர்  எஸ்.என். சிக்கந்தர், செம்மொழி ஞாயிறு விருது - கல்வெட்டியலறிஞர் எ. சுப்பராயலுவுக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகள் வழங்கும் விழா மே 25 ஆம் தேதி (25.05.2024) சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ளார்.