காட்டில் கம்பீரமாக உலா வரும் விலங்கில் ஒன்று காட்டு யானைகள். ஆனால் இந்த யானைகளை குடற்புழு நோய் தாக்குவதால் அதிகளவில் இறக்கின்றது. இதனால் சமூக ஆர்வலாகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
![erode district sathyamangalam forest elephant incident](http://image.nakkheeran.in/cdn/farfuture/_nPccjqABSTQvBl40icbkQsYMyT9VdQ4IErGmbfxQrc/1582432072/sites/default/files/inline-images/elephan.jpg)
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தான் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இந்தநிலையில் பவானிசாகர் வனச்சரகத்திற்க்கு உட்பட்ட தெங்குமரஹாடா வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சுமார் பத்து வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று சாலையோரமாக இறந்து கிடந்ததுள்ளது.
இதனையடுத்து உடனடியாக பவானிசாகர் வனச்சரகர் மனோஜுக்கு வனத்துறை ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரகர் மற்றும் வனத்துறை மருத்துவர் யானையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்தனர். அதில் யானை குடற்புழு நோய் தாக்கி மரணம் அடைந்துள்ளது என உறுதிப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து யானையின் உடலில் உள்ள 2 தந்தங்களை வனத்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டு, யானையின் உடலை விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உணவாக அப்படியே வனப்பகுதியில் விடப்பட்டது.