Skip to main content

“மு.க.ஸ்டாலின் எண்ணங்களுக்கு ஏற்ப நடந்து தி.மு.க. வெற்றிக்கு பாடுபடுவேன்...” -துரைமுருகன்

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

Durai Murugan

 

 

மு.க.ஸ்டாலின் எண்ணங்களுக்கு ஏற்ப நடந்து தி.மு.க. வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் பாடுபடுவேன் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

 

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தி.மு.க.வின் பெருமைமிக்க பொதுச்செயலாளர் தகுதிக்கு நான் போட்டியிட அனுமதி அளித்த கட்சியின் போற்றுதலுக்குரிய தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், என்னை போட்டியின்றி அத்தகுதிக்கு தேர்ந்தெடுத்த மதிப்புக்குரிய தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும் எனது மனம் கனிந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

 

வரலாற்று சிறப்புமிக்கதும் நம் வணக்கத்துக்குரிய தலைவர்கள் அமர்ந்து நிர்வாகம் செய்த, அந்த இடத்தில் அமரப் போகும் நான் அந்த தலைவர்களின் புகழுக்கும், கீர்த்திக்கும் பங்கம் ஏற்படா வண்ணம் நடந்து கொள்வேன் என்று உறுதி கூறுவதோடு மு.க.ஸ்டாலினின் எண்ணங்களுக்கு ஏற்ற வண்ணம் நடந்து, தி.மு.க.வின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் பாடுபடுவேன் என்பதையும் உறுதி செய்கிறேன். நான் தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுத்ததற்காக, நேரில் வந்து பாராட்டிய கட்சியின் எல்லா நிலையிலும் இருக்கும் தோழர்களுக்கும், தொலைபேசி மூலமாகவும், கடிதங்கள் மூலமாகவும் மற்றும் நேரில் வந்து வாழ்த்து சொன்ன பல்வேறு அரசியல் மற்றும் சமுதாய கட்சி தலைவர்களுக்கும் என் நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன்” இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்