Skip to main content

ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தவர் தான் டிடிவி!  அமைச்சர்கள் கடும்தாக்கு!!

Published on 24/09/2018 | Edited on 24/09/2018
mgr

    

திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 110வது பிறந்த நாள் விழா மற்றும் இலங்கை தமிழர்களுக்கு தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இழைக்கப்பட்ட துரோகத்தை கண்டித்து ஒட்டன்சத்திரத்தில்  பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் மருதராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உள்பட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சிப் பொறுப்பாளர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். 

 

இக்கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேசும்போது... ’’காலம் முழுவதும் கலைஞரை எதிரியாக கொண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது தான் அ.தி.மு.க. ஆகும். அதன் வழியில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் தற்போது சிறப்பாக ஆட்சி புரிந்து வருகின்றனர். ஜெயலலிதா மீது போடப்பட்ட வழக்கு கடந்த 2008-ம் ஆண்டு பெங்களுருவில் நடந்துகொண்டு இருந்தபோது, அவர் எப்படியும் சிறைக்கு சென்றுவிடுவார். நாம் முதல் அமைச்சர் ஆகிவிடலாம் என்று அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் பேசியுள்ளனர். இதற்கான ஆதாரம் ஜெயலலிதாவின் கையில் கிடைத்ததை அடுத்து அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களை கட்சியை விட்டே ஒதுக்கி வைத்தார். 

 

mg

 

கலைஞர் ஆட்சியில்  1996ம் ஆண்டு டி.டி.வி. தினகரன் லண்டனில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான மதிப்பில் சொத்து வாங்கினார்.  அதுகுறித்த வழக்கில் ஜெயலலிதாவும் சேர்க்கப்பட்டார். அதையடுத்து டி.டி.வி. தினகரன் கலைஞரை சந்தித்து இந்த வழக்கில் இருந்து என்னை மட்டும் விடுவித்துவிட்டு, வழக்கை வேமாக முடித்துக் கொடுங்கள் என்று கூறினார். இதையடுத்து கலைஞர்தான் அந்த வழக்கில் இருந்து டி.டி.வி. தினகரனை விடுவித்து ஜெயலலிதாவுக்கு தண்டனை வாங்கி கொடுத்தார். இதனால் கலைஞரை விட டி.டி.வி.தினகரன் தான் ஜெயலலிதாவுக்கு துரோகி ஆனார். தற்போது அவர் 18 எம்.எல்.ஏ.க்களை வைத்துக் கொண்டு மு.க.ஸ்டாலினுடன் கூட்டு சேர்ந்து இந்த ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்து வருகிறார். 

 

அ.தி.மு.க.வின் எதிரியான தி.மு.க.வுடன் டி.டி.வி. தினகரன் உடன்படிக்கை போட்டுள்ளார். இதனால் அவர் பக்கம் சென்றவர்கள் இந்த உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். ஜெயலலிதாவுக்கு இந்த நிலை ஏற்பட காரணம் முழுவதும் டி.டி.வி தினகரன்தான். அவர் எங்களை பார்த்து ஊழல்வாதி என்கிறார். ஊழலின் தலைவரே டி.டி.வி. தினகரன் தான். கட்சியில் 98 சதவீதம் தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர். டி.டி.வி. தினகரன் 18 எம்.எல்.ஏ.க்களையும் ராஜினாமா செய்ய சொல்லிவிட்டு தேர்தலை சந்தித்து இருந்தால் அவருக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது என்று வைத்து கொள்ளலாம். தற்போது நடைபெறும் ஆட்சியை கட்சியை கலைத்து விட்டு கட்சியை கைப்பற்ற டி.டி.வி. தினகரனும், ஆட்சியை கைப்பற்ற மு.க.ஸ்டாலினும் திட்டமிட்டுள்ளனர் என்று கூறினார்.

 

mg

 

அதன்பின் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது...  ‘’தற்போது டிடிவி தினகரன் ஒரு இயக்கத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அவருடைய உறவினர்கள் மொத்தம் 10 கட்சியை தொடங்கி உள்ளனர். இது பணத்தை கொள்ளையடிப்பதற்காக தான். தீபா ஒரு இயக்கத்தை நடத்தி வருகிறார். அதன் நிலை எப்படி உள்ளது என்று அனைவருக்கும் தெரியும். அதேபோல தான் டி.டி.வி. தினகரன் தொடங்கிய கட்சிக்கும் நடக்கும். எம்.ஜி.ஆரின் புகழை பரப்பும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது. வருகிற 30ம் தேதி சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. 

 

கலைஞருடன் சேர்ந்து ஜெயலலிதாவை காட்டிக்கொடுத்து துரோகம் செய்தவர் டி.டி.வி. தினகரன். அவரை நம்பி அந்த பக்கம் சென்றவர்கள், நியாயத்தை நினைத்து பார்த்து நம்முயை கழகத்தில் இணயை வேண்டும். நடைபெற உள்ள திருப்பங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. ஒரு லட்சம் வாக்குக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் தி.மு.க. செய்த உதவிக்கு நன்றி என்று ராஜபக்சே சமீபத்தில் கூறினார். இதனால் தமிழ் பெண்களை கற்பழித்து கொன்றுகுவித்த இலங்கை அரசுக்கு துணை நின்ற தி.மு.க.வை மத்திய அரசு தண்டிக்க வேண்டும். கலைஞருக்கு மெரினாவில் இடம் கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. முன்னாள் முதல் அமைச்சர் ஜானகி இறந்தபோது, அவரை எம்.ஜி.ஆரின் அருகில் அடக்கம் செய்ய இடம் கேட்டோம். ஆனால் அப்போது முதல் அமைச்சராக இருந்த கலைஞர் தான் முன்னாள் முதல் அமைச்சர்களுக்கு மெரினாவில் இடம் கிடையாது என கூறினார். ஆட்சியையும், அ.தி.மு.கவையம் எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது’’ என்று கூறினார்.

 

ஆனால் கூட்டம் தொடங்கிய உடனே மழை பெய்ததால் கூட்டத்திற்கு வந்த பெரும்பாலான மக்கள் கூட்டத்திலிருந்து வெளியேறி விட்டனர். அப்படியிருந்தும் ஒரு சில மக்களே சேர்களை குடையாக பயன்படுத்திக்கொண்டு அமைச்சர்கள் பேச்சை கேட்டுக் கொண்டு இருந்தனர். அதை தொடர்ந்து திடீரென உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி கூட்டத்திற்கு வந்தார். அவரை அமைச்சர் சீனிவாசன், வேலுமணி ஆகியோர் வரவேற்றனர். அதன்பின் மாவட்ட கழகம் சார்பாக நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தி.மு.க. காங்கிரஸ் ஆட்சியில் இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி கண்டனத்தை தெரிவித்தனர்!

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.