Skip to main content

மூளைச்சாவு அடைந்த முதியவர்; சிறுநீரக தானம்; மறுவாழ்வு பெற்ற வாலிபர் 

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

covai old man organ donate erode youngster life extend

 

ஈரோடு மாவட்டம் கோபியைச் சேர்ந்த 41 வயது நோயாளி ஒருவருக்குச் சிறுநீரகம் செயல் இழந்து, ஈரோடு தனியார் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். தமிழ்நாடு உடல் உறுப்பு தான அமைப்பில் சிறுநீரகம் பெறக் கோபியைச் சேர்ந்த நோயாளி பதிவு செய்து கடந்த 3 ஆண்டுகளாகக் காத்திருந்தார்.

 

இந்நிலையில், கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 62 வயதுடையவரின் சிறுநீரகம், கோபியைச் சேர்ந்தவருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க முடிவானது. இதையடுத்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கோபியைச் சேர்ந்தவர் அனுமதிக்கப்பட்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு தயார்ப்படுத்தினார். தொடர்ந்து கோவையிலிருந்து ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சு மூலம் ஒரு மணி நேரத்தில் சிறுநீரகம் கொண்டு வரப்பட்டு, மருத்துவர் சரவணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கோபியைச் சேர்ந்தவருக்கு வெற்றிகரமாகச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.

 

இதுகுறித்து  மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சரவணன் கூறுகையில், "கோபியைச் சேர்ந்தவருக்கு குரோனிக் கிட்னி வியாதி(சிகேடி) என்ற நோய் பாதிப்பு காரணமாகச் சிறுநீரகம் செயலிழந்துவிட்டது. கடந்த 3 ஆண்டுகளாக எங்களது மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். தற்போது, கோவையிலிருந்து தானமாகப் பெறப்பட்ட சிறுநீரகம் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்