Skip to main content

கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த தடையில்லை!- உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Published on 19/08/2020 | Edited on 19/08/2020

 

coimbatore international airport chennai high court judgement

 

கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தடையில்லை என  சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை சுமார் 5,000 கோடி ரூபாய் செலவில் விரிவாக்க மத்திய அரசு முடிவெடுத்தது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த 2017- ஆம் ஆண்டு தொடங்கியது.

 

விரிவாக்க திட்டத்திற்கு எதிராக அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை காளபட்டியைச் சேர்ந்த அம்மணியம்மாள் உள்ளிட்ட 12 பேர் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கில்  முறையான கருத்து கேட்கவில்லை, தங்களது எதிர்ப்புகளை பரிசீலிக்கவில்லை, தங்களுடைய நிலத்திற்கு செல்ல பாதை கிடைக்காது. எனவே, விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து நிலம் கையகப்படுத்தக்கூடாது என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.

 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நிலம் கையகப்படுத்த தடை விதித்திருந்தது. இந்த தடையை நீக்கக்கோரி தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. தமிழக அரசின் சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி நிலம் கையகப்படுத்துவதற்கு இழப்பீடாக நில உரிமையாளர்களுக்கு தொகை நிர்ணயிக்கப்பட்டு, அந்த தொகையை பெற்றுக்கொள்ள அவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.  அவர்களுக்கான நிதியையும் தமிழக அரசு ஒதுக்கிவிட்டது. வழக்கு நிலுவையில் உள்ளபோதே, இழப்பீடு பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். எனவே, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி,  திட்டத்தை தொடர அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

 

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், தடையை நீக்கி நிலத்தை கையகப்படுத்தி, திட்டத்தை தொடரலாம் என்று தீர்ப்பளித்துள்ளனர். இழப்பீடு பெறாதவர்களுக்கு ஒரு மாதத்தில் இழப்பீடு தரவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். பாதை தொடர்பான வழக்கை இந்த நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம்; “எப்படி அனுமதி வழங்க முடியும்?” - நீதிபதி கருத்து

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
Judge opinion Armstrong was buried

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று(5.7.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு  தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் உடலைக் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி அவரது மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த தொடர்பான வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் இடம் நெரிசல் மிகுந்தப் பகுதி எனக்கூறி வரைபடங்களை சமர்ப்பித்து வாதாடினார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி பவானி சுப்பராயன், “சட்டப்படி குடியிருப்பு பகுதிகளில் உடலை அடக்கம் செய்ய முடியாது. ஆம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும் சட்ட விதிகளை மீற முடியாது. உடல் அடக்கம் செய்யக்கோரும் இடம் நெருக்கடியான பகுதி. மயானம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் தான் அடக்கம் செய்ய முடியும். வேறு பெரிய சாலை, விசாலமான இடம் இருந்தால் சொல்லுங்கள். இந்த யோசனை குறித்து மனுதாரரிடம் கேட்டுச் சொல்லுங்கள்; அதன்பிறகு உத்தரவு பிறப்பிக்கிறேன்” என்று கூறி காலை 10:30 மணிக்கு மனுதாரர் தரப்பினர் முடிவைச் சொல்ல வேண்டும் என்று நீதிபதி வழக்கு விசாரணையை 10:30 மணிக்கு ஒத்திவைத்தார். ஆனால், 12 மணிக்குத் தனது முடிவைச் சொல்வதாகப் பொற்கொடி தரப்பினர் முறையிட்டனர்.

அதன்படி, 12 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பொற்கொடி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டதாவது, “பெரம்பூரில் சுமார் 7.500 சதுர அடி நிலத்தில் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும். விஜயகாந்தின் உடலை அவரது நிலத்திலேயே அடக்கம் செய்ய அனுமதி தரப்பட்டது. விஜயகாந்தின் உடலை அடக்கம் செய்ய அனுமதி தரப்பட்டது போல் அனுமதி வழங்க வேண்டும்” என்று கூறினார். 

இதையடுத்து அரசு தரப்பில் கூறியதாவது, “ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய 200 சதுர அடி நிலம் ஒதுக்க தயாராக இருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் உடலை கண்ணியத்துடன் அடக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அதே சமயம் விதிகளை மீற முடியாது. ஆம்ஸ்ட்ராங்கின் உறவினர் திருவள்ளூரில் ஒரு ஏக்கர் நிலம் தர தயாராக இருக்கிறார். அந்த இடத்தில் மணிமண்டபமும் அமைக்கலாம்” என வாதிட்டார். 

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, “ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய மனுதாரர் தெரிவிக்கும் புதிய இடமும் குடியிருப்பு பகுதியாகும். குடியிருப்பு பகுதியில் உடலை அடக்கம் செய்ய எப்படி அனுமதி வழங்க முடியும்?. முதலில் அரசு கூறும் இடத்தில் அடக்கம் செய்யுங்கள். உங்கள் விண்ணப்பத்தை மாநகராட்சி நிராகரித்துள்ளது. அரசுதான் உங்கள் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். அதுவர் உடலை பள்ளியில் வைத்திருக்க முடியாது. ஆம்ஸ்ட்ராங் உடலை அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்வது நல்லது. அரசு தரப்பில் தரப்படும் புதிய இடம் தொடர்பாக அரசிடம் ஆம்ஸ்ட்ராங் மனைவி மனு அளிக்கலாம். அந்த மனுவை பரிசீலித்து அரசு முடிவெடுக்க வேண்டும். 

நாளை பள்ளிகள் திறக்கவுள்ளதால் இன்றே உடலை அடக்கம் செய்ய வேண்டும். புதிதாக குறிப்பிடும் நிலத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து அரசு ஆராய வேண்டும். குடியிருப்பு பகுதியில் அடக்கம் செய்ய சிலர் ஆட்சேபம் தெரிவிக்கலாம். ஒதுக்குபுறமாக விசாலமான இடத்தை தேர்ந்தெடுங்கள். நல்ல இடத்தில் மணிமண்டபம் அமைக்கலாம். அம்பேத்கர் மணிமண்டபம் போல விசாலமான இடத்தில் மணிமண்டபம் அமைத்தால் நிகழ்ச்சி நடத்த இடையூறு இருக்காது. இது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் அதிகார எல்லையைத் தாண்ட முடியாது. உடல் அடக்கம் தொடர்பான இடத்தை தேர்வு செய்வதில் அரசுதான் முடிவு எடுக்க முடியும்.” என்று கூறி வழக்கு விசாரணையை மதியம் 2:15 மணிக்கு ஒத்திவைத்தார். 

Next Story

ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய வழக்கு; மனுதாரருக்கு யோசனை சொன்ன நீதிபதி!

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
The judge advised the petitioner on Petition for Burial at Armstrong Party Office

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று(5.7.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு  தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, இந்தக் கொலை வழக்கில், நேற்று இரவே(5.7.2024), பாலா, ராமு, திருமலை, செல்வராஜ், அருள் உள்ளிட்ட 8 பேர் தாங்கள்தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தோம் என்று காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதில் கடந்த ஆண்டு வெட்டி கொல்லப்பட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலா என்பவர் தனது அண்ணன் கொலைக்கு பழிக்கு பழி வாங்கவே, கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக  பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் இந்த வழக்கில் மேலும் 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்ற நிலையில், அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுச் சென்று அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. இதனையடுத்து, பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் ஆம்ஸ்ட்ராங்கினுடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள், கட்சி நிர்வாகிகல், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பொதுமக்கள் வருகையையொட்டி பெரம்பூர், செம்பியம் பகுதியில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மாயாவதி இன்று (07-07-24) காலை 9:30 மணிக்கு சென்னை வந்து ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார். மாயாவதி வருகையையொட்டி, சென்னை காவல்துறையினர் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கமாண்டோ போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி அவரது மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த தொடர்பான வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் இடம் நெரிசல் மிகுந்தி பகுதி எனக்கூறி வரைப்படங்களை சமர்பித்து வாதாடினார். அப்போது அவர், “அலுவலகம் உள்ள பகுதி மக்கள் நெருக்கடி நிறைந்த பகுதி. 16 அடி சாலை அருகில் நிலம் அமைந்துள்ளது. அருகில் வீடுகள் உள்ளன. குடியிருப்பு, குறுகலான சாலை போன்ற காரணங்களால் தான் அனுமதி மறுக்கப்பட்டது. வீட்டில் இருந்து 1.5 கி.மீ தூரத்தில் ஒரு இடம் தேர்ந்தெடுத்துள்ளோம். அங்கு அடக்கம் செய்து கொள்ளலாம்” என்று கூறினார். இதனையடுத்து பொற்கொடி தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு, “கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய, அருகில் வசிப்பவர்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.ஆம்ஸ்ட்ராங்குக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யவே அனுமதி கோரியுள்ளோம்” என்று வாதிட்டார். 

The judge advised the petitioner on Petition for Burial at Armstrong Party Office

அதனை தொடர்ந்து நீதிபதி பவானி சுப்பராயன், “சட்டப்படி குடியிருப்பு பகுதிகளில் உடலை அடக்கம் செய்ய முடியாது. ஆம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும் சட்ட விதிகளை மீற முடியாது. உடல் அடக்கம் செய்யக்கோரும் இடம் நெருக்கடியான பகுதி. மயானம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் தான் அடக்கம் செய்ய முடியும். தற்போது அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்துவிட்டு, உங்களுக்கு பிடித்த வேறு இடத்தில் மணிமண்டபம் கட்டிக்கொள்ளலாம். தற்போது பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது. வேறு பெரிய சாலை, விசாலமான இடம் இருந்தால் சொல்லுங்கள். இந்த யோசனை குறித்து மனுதாரரிடம் கேட்டு சொல்லுங்கள்; அதன்பிறகு உத்தரவு பிறப்பிகிறேன். நீதிபதியாக அல்லாமல் சகோதரியாக சொல்கிறேன். அடக்கம் செய்ய வேறு இடத்தை கூறுங்கள். பேசிவிட்டு வாருங்கள்; நான் இங்கேயே இருக்கிறேன். வழக்கை 10:30 மணிக்கு விசாரிக்கிறேன்” என்று கூறி காலை 10:30 மணிக்கு மனுதாரர் தர்ப்பினர் முடிவை சொல்ல வேண்டும் என்று நீதிபதி வழக்கு விசாரணையை 10:30 மணிக்கு ஒத்திவைத்தார்.