
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட டி. ஆண்டிப்பட்டி கிராமத்தில் கழிவுநீர்க் குழியில் மூழ்கி உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். அதோடு நிதியுதவியையும் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்டது டி. ஆண்டிப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வரும் சந்தனகருப்பு - கிருஷ்ணவேணி தம்பதியரின் இரண்டு குழந்தைகளான கேசவன் (வயது 4) மற்றும் ரோஷன் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் (15.03.2025) அன்று மாலை 04.00 மணியளவில் வீட்டினருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அருகிலிருந்த கழிவுநீர்க் குழியில் விழுந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் நீரில் தத்தளித்த ரோஷன் அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்ட நிலையில் மற்றொரு குழந்தை கேசவன் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இச்சம்பவத்தில் உயிரிழந்த குழந்தை கேசவனின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு, உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதலையும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று இலட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.