Skip to main content

சின்னம் ஒதுக்கக்கோரிய த.மா.கா. மனு மீது நாளைக்குள் உத்தரவு!- மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 16/12/2019 | Edited on 16/12/2019

உள்ளாட்சி தேர்தலுக்கு சின்னம் ஒதுக்கக் கோரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை மனு மீது நாளைக்குள் உத்தரவு பிறப்பிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

tamil maanila congress party jk vasan chennai high court


கடந்த 1996-ம் ஆண்டில் துவங்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களிலும், 2001 சட்டமன்ற தேர்தலிலும், சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டது. பின், 2002-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து, 2014-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து வெளியேறி, தமாகா மீண்டும் உருவானது.
 

தற்போது தமாகா தனியாக செயல்படுவதால், கடந்த தேர்தல்களைப் போல வரும் உள்ளாட்சி தேர்தலில் சைக்கிள் அல்லது மோட்டார் சைக்கிள் அல்லது ஆட்டோ ரிக்ஷா சின்னத்தை ஒதுக்கக் கோரி தமாகா சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. அந்த மனுவை மாநில தேர்தல் ஆணையம் நிராகரித்ததை,  உத்தரவை ரத்து செய்துவிட்டு, சைக்கிள், மோட்டார் சைக்கிள் அல்லது ஆட்டோ ரிக்ஷா என மூன்றில் ஏதாவது ஒரு சின்னத்தை ஒதுக்கக் கோரி தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

tamil maanila congress party jk vasan chennai high court

இந்த வழக்கு இன்று (16.12.2019) நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மாநில தேர்தல் ஆணையத்திடம் சின்னம் ஒதுக்கக் கோரி தமாகா உடனடியாக புதிய விண்ணப்பம் அளிக்கும்படி அறிவுறுத்தினர். அந்த விண்ணப்பத்தை சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து நாளைக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.



 

சார்ந்த செய்திகள்