Skip to main content

பேருந்துகளை நிறுத்திய பா.ஜ.க.வினர்; டி.எஸ்.பி.யிடம் வாக்குவாதம் செய்த அமர் பிரசாத்

Published on 31/07/2023 | Edited on 31/07/2023

 

BJP stopped the buses; Amar Prasad argued with DSP

 

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 'என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில்  கடந்த 28 ஆம் தேதி அன்று இராமேஸ்வரத்திலிருந்து ஊழலுக்கு எதிரான நடைப்பயணத்தைத் தொடங்கினார். இந்த நடைப்பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்த தொடக்க  விழாவில் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். அண்ணாமலை நடத்தும் இந்தப் பாதயாத்திரை மூலம் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் எனவும், ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் ஒரு மத்திய அமைச்சர் பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், சனிக்கிழமை அன்று ராமேஸ்வரம், மண்டபம், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் நடைப்பயணத்தை மேற்கொண்ட அண்ணாமலை, நேற்று முதுகுளத்தூர் மற்றும் பரமக்குடி பகுதிகளில் நடைப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன் பின்னர், அண்ணாமலை முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள  தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

இதனால், காலை 9 மணிக்கு முன்னேரே பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை பகுதியில் கூடியிருந்தனர். மேலும், அந்தப் பகுதி,பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர், கமுதி - கடலாடி ஆகிய பிரதான சாலை என்பதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையில், அண்ணாமலை திருஉத்தரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுறை மங்களநாதர், மரகத நடராஜர் ஆகிய கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காகச் சென்றிருந்தார். அங்கிருந்து, பாதயாத்திரை துவங்கும் முதுகுளத்தூர் பகுதிக்கு 11:50 மணி அளவில் வந்தார். அண்ணாமலை, அந்த இடத்திற்கு வரும் வரை அந்தப் பகுதிக்கு வந்த பேருந்துகளை பா.ஜ.க தொண்டர்கள் நிறுத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பேருந்துகளில் இருந்த பயணிகள் அனைவரும் பேருந்தை விட்டு இறங்கி வெயிலில் நடந்து செல்லத் துவங்கினர்.

 

இதையடுத்து, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கமுதி டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையிலான காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி பேருந்துகள் செல்ல நடவடிக்கை எடுத்தனர். அப்போது, பா.ஜ.க தொண்டர்களுடன் பா.ஜ.க. விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுத் தலைவர் அமர்பிரசாத் ரெட்டி அந்த இடத்திற்கு வந்தார். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி. மணிகண்டனுடன், பேருந்துகளை இயக்கக்கூடாது என்று அமர் பிரசாத் ரெட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என சொல்லப்படுகிறது. அவருடன் வந்த தொண்டர்களும் காவல்துறையினரிடம் ஆவேசப்பட்டனர்.

 

இதனால், அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த பா.ஜ.க  மாவட்டத் தலைவர் தரணி முருகேசன், அமர்பிரசாத் ரெட்டியை அழைத்துச் சென்றார். பா.ஜ.க தொண்டர்களின் இந்தச் செயலால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்தப் பகுதியில் பேருந்து போக்குவரத்து ஸ்தம்பித்தது.  இதனால், பேருந்துகளில் இருந்து கைக்குழந்தைகளுடன் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பயணிகள் அனைவரும் சுடும் வெயிலில் சுமார் 2 கி.மீ. தூரம் நடந்து சென்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.