Skip to main content

பிரதமர் மோடியை சந்திக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

Published on 03/01/2024 | Edited on 03/01/2024
Minister Udayanidhi Stalin to meet PM Modi

தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து ஜனவரி 19 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை நடத்த உள்ளது. 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நடத்தப்படும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 5500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள், 1600க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள், 1000க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் 1200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்.

மேலும், இந்தப் போட்டியில் 27 வகையான விளையாட்டுகளுடன், தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் டெமோ விளையாட்டாக (Demo Sport) இடம்பெற உள்ளது. கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை மேற்கொண்டு வருகிறது. இதனையொட்டி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிக்கான திருவள்ளுவர் இலச்சினையை கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, மத்திய இளைஞர் விவகாரம், விளையாட்டு மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் போட்டியின் சின்னமாக வீர மங்கை வேலு நாச்சியாரின் உருவத்தை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழை வழங்குவதற்காக நாளை (04.01.2024) பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திக்கிறார். இதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். 

சார்ந்த செய்திகள்