Skip to main content

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம்! 

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

Annamalai University dismissed 56 assistant professors!

 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட நிதி சிக்கல் காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது பல்கலைக்கழகத்தை அரசு முழுக் கட்டுப்பாட்டில் எடுத்து நிர்வகித்து வருகிறது.

 

அப்போது பல்கலைக்கழகத்தை சீர்படுத்தும் பணியாகத் தமிழக அரசு சார்பில் முதன்மைச் செயலாளர் சிவதாஸ் மீனா நியமிக்கப்பட்டார். அப்போது இவர் பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகளில் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் குறித்தும் அவர்கள் கல்வி குறித்தும் ஆய்வு செய்தபோது பேராசிரியருக்குத் தேவையான கல்வித் தகுதி இல்லாமல் இருந்தது அதிர்ச்சி அளித்துள்ளது.

 

பின்னர் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்த நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் துணைவேந்தர் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் தணிக்கை குழு ஆய்வு மேற்கொண்டபோது தகுதி இல்லாத உதவி பேராசிரியர்கள் குறித்து தெரியவந்தது. தகுதி இல்லாத பேராசிரியர்கள் 56 பேரை இன்று உயர் கல்வித்துறை உத்தரவின் பேரில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

இதில் பெரும்பான்மையான அளவில் மேலாண்மைத் துறையில் பணியாற்றும் உதவி பேராசிரியர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்து திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலமாக கல்வி பயின்றும் பிஹெச்டி இல்லாமல் உதவி பேராசிரியராகப் பணியில் இருந்தும் வருகிறார்கள் எனக் கூறப்படுகிறது.

 

இது குறித்து பாதிக்கப்பட்ட உதவி பேராசிரியர் தரப்பில் மொத்தம் 80க்கும் மேற்பட்டவர்கள் உள்ளதாகத் தணிக்கையில் தெரியவந்தது. இதில் சிலர் எங்களுக்கு எந்த பதவி உயர்வும் வேண்டாம் இதிலேயே இப்படியே இருக்கிறோம் எனக் கடிதம் கொடுத்துள்ளதால் அவர்கள் தகுதி இல்லாமல் இருந்தும் தொடர்ந்து பணியாற்றுகிறார்கள். எல்லோருக்கும் ஒரே மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்ளாமல் இதுபோன்று செய்வது வருத்தம் அளிக்கிறது. அதேபோல் உதவி பேராசிரியருக்குத் தகுதி இல்லாத எங்களை பணி அமர்த்தியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும். எனவே இது குறித்து நீதிமன்றத்திற்குச் சென்று முறையிட்டு வெற்றி பெறுவோம் என்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலியல் சமத்துவ பயிற்சி பட்டறை

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Gender Equality Workshop at Annamalai University

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து பாலியல் சமத்துவத்தைப் பற்றிய 3 நாட்கள் பயிற்சி பட்டறை பல்கலைக்கழக மக்களியல் துறையில் நடைபெற்றது. மக்களியல் துறை உதவிப் பேராசிரியர் க. மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். கலைப்புல தலைவர் விஜயராணி தலைமை தாங்கிப் பேசினார். துறைத் தலைவர் ரவிசங்கர் பயிற்சி பட்டறை பற்றிய தொகுப்பு உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆளவை மன்ற உறுப்பினர் பேராசிரியர் அரங்க பாரி, ராஜீவ்காந்தி தேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியர் வசந்தி ராஜேந்திரன், சிதம்பரம் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்குப் பாலியல் சமத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ - மாணவியர்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரி மாணவ - மாணவியர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். மக்களியல் துறை இணைப் பேராசிரியர் பீமலதா தேவி நன்றியுரை வழங்கினார்.

Next Story

‘மீண்டும் கல்லூரிக்குப் போகலாம்’ - குடும்பத்தினருடன் பொன்விழாவைக் கொண்டாடிய முன்னாள் மாணவர்கள்!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 1970 முதல் 1974 ஆம் ஆண்டில் வேளாண் கல்லூரியில் 45 மாணவர்கள் பயின்றனர். கல்வி பயின்ற பிறகு அவர்கள் மத்திய - மாநில அரசின் பல்வேறு துறைகளில் வங்கி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட  பல்வேறு துறைகளில் பணியாற்றி பணி நிறைவு பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, ‘AU74 அக்ரி பட்டதாரிகள் சங்கம்’ என்ற சங்கத்தை அமைத்து,  அரசுப் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். மேலும் அவர்கள், பல்வேறு கல்லூரிகளில் பயிலும் வேளாண் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகின்றனர்.

இவர்கள் கல்வி பயின்று 50 ஆண்டுகள் கடந்த நிலையில், குடும்பத்தினருடன் இணைந்து 50 ஆம் ஆண்டு பொன்விழாவை (1974 - 2024) பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் கொண்டாடினார்கள். இவ்விழாவுக்கு சங்கத்தின் தலைவர் அக்ரி நடராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராகப் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன் கலந்துகொண்டு, முன்னாள் மாணவர்களை பாராட்டி பொன்விழா ஆண்டு மலரை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

இதில் பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேலு,  தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், வேளாண் புல தலைவர் அங்கயற்கண்ணி மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்த முன்னாள் பேராசிரியர்கள் பாலசுப்ரமணியன், கோவிந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு முன்னாள் மாணவர்களைப் பாராட்டி மலரும் நினைவுகளை நினைவுகூர்ந்து வாழ்த்தினார்கள்.

Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

மேலும், அங்கு பயின்ற முன்னாள் வேளாண் மாணவர்கள் வேளாண் கல்லூரிக்கு, சங்கத்தின் சார்பாக ரூ. 3 லட்சம் செலவில் உபகரணங்கள், அறைகள் புதுப்பித்தல் போன்ற உதவிகளைச் செய்வதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து குடும்பத்துடன் அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, ‘50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை குடும்பத்துடன் சந்தித்த நிகழ்வு மறக்க முடியாத ஒன்றாக உள்ளது’ என்று கூறினார்கள்.