
பிரபல தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் சீரியல் நடிகையாக இருந்து வருபவர் ரிஹானா பேகம். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பூந்தமல்லி காவல்நிலையத்தில் ராஜ் கண்ணன் என்பவர் ரிஹானா பேகம் மீது திருமண மோசடி புகார் ஒன்று கொடுத்திருந்தார். அந்த புகாரில் ஏற்கனவே திருமணம் நடந்து, அவருக்கு விவாகரத்து ஆகாமலே என்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாகவும் ரூ.18 லட்சம் பணத்தை ஏமாற்றிவிட்டதாகவும் அதனைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறும் புகார் கொடுத்திருந்தார். இந்த விசாரணையில் ரூ.18 லட்சம் ராஜ் கண்ணன் ஏமாறவில்லை, ஏமாந்தது நடிகை ரிஹானா பேகம்தான் என்று திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.
இது ஒருபுறமிருக்க, கடந்த 2023 ஆம் ஆண்டு ரிஹானாவிற்கு அவரது தோழி மூலம் ராஜ் கண்ணனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ரிஹானா பேகத்தின் தோழியும் ராஜ் கண்ணனும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து(லிவ்விங் டுகெதரில்) வாழ்ந்து வருகின்றனர். அது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையைத் தீர்த்துவைக்கும் வகையில் ரிஹானா பேகம் பேசியுள்ளார். பிறகு ரிஹானா பேகம் பிஸினஸ் செய்யும் நோக்கத்தில் இருப்பதை உணர்ந்த ராஜ் கண்ணன், “ஒருநாள் பிஸினஸ் செய்வதற்கான பயிற்சிக்கூட்டம் நடக்க இருக்கு. உங்களுக்கு ஆர்வம் இருந்தால் வந்து கூட்டத்தில் கலந்துகொள்ளுங்கள்” என அழைத்திருக்கிறார்.

மேலும், “அக்டோபர் மாதம் வேளச்சேரியிலுள்ள பீனிக்ஸ் மால் முன்பு உள்ள கட்டடத்தில், வாடகைக்கு எடுத்து அதில் பாய்சன் ரெஸ்ட்ரோ பார் லவுஞ்ச் என்ற பெயரில் தொடங்கலாம். நீங்க ரூ.20 லட்சம் கொடுங்க. மாதம் உங்களுக்கு ரூ.5 லட்சம் வருமானமாக வந்துவிடும்..” எனச் சொல்லவே தன்னுடைய நகைகளை வைத்து ரூ.15 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளார். சீரியலில் வருமானம் குறைவாக வருவதால் தன் குடும்பத்தை வளப்படுத்த இந்த பிஸினஸ் உதவியாக இருக்குமென என ரிஹானா பேகம் நினைத்திருக்கிறார். ஆனால் அதிலிருந்து எந்த வருமானமும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றமடைந்த பேகம் பணத்தைக் கேட்கவே, “தற்போது தொழில் நஷ்டத்தில் சென்றுகொண்டிருக்கிறது. கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள். மொத்தமாக கொடுத்துவிடுகிறோம்” என ராஜ் கண்ணன் கூறியதால் வேறுவழியில்லாமல் பணத்திற்காக ரிஹானா காத்திருந்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் பேகம் தொடர்ந்து பணம் கேட்டு வந்ததால், ஆத்திரமடைந்த கண்ணன் திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார். அதன்படி, பணம் தருவதாக ரிஹானாவை ஒரு இடத்திற்கு வரவழைத்து கண்களை மூடச்சொல்லி திடீரென தன் கையில் வைத்திருந்த தாலியை ராஜ் கண்ணன் கட்டியுள்ளார். இதனைப் பார்த்து பதறிப்போன ரிஹானாவிடம், இனி என்னுடைய மனைவி, நீ எப்படி என்னிடம் பணம் கேட்கமுடியும்” என்று கூறியிருக்கிறார். மேலும், தன்னுடைய காரில் ரிஹானாவை அழைத்துச்சென்று பாட்ஷா படப் பானியில் நான் யாரு என்று தெரியுமா? என காரில் இருந்த கத்திகளைக் காட்டி, “என்னுடைய பெயர் கண்ணன் இல்லை அழகர்சாமி. நான் பெசன்ட் நகரில் பிறந்து வளந்தவன். சிறுவயதிலே சிறைக்குச் சென்றவன். பிறகு பல பிரபல ரவுடிகளுடன் கொலைகளைச் செய்துள்ளேன். என் மீது 76 வழக்குகள் உள்ளன” என மிரட்டவே வேறுவழியில்லாமல் சில காலம் தன்னுடைய குழந்தைகளுக்காக வாழ்ந்துள்ளார். பிறகு இவரின் சுயரூபம் தெரியவந்ததும் உடனடியாக ரிஹானா மகளிர் ஆணையத்தில் 2024-ஆம் ஆண்டு புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரை முன்னிருத்தி விசாரணை செய்ததில் உண்மை வெட்டவெளிச்சமானது. அதன்படி இனிமேல் இதுபோன்ற விவகாரம் செய்யக்கூடாது. அவரிடம் வாங்கிய பணத்தை நீதிமன்றத்தின் மூலமாக கொடுத்துவிடுவதாகவும் எழுத்து மூலமாக எழுதிக்கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார் ராஜ் கண்ணன். இந்த ஒட்டுமொத்த விவகாரமும் பூந்தமல்லி போலீசார் விசாரணையிலும் தெரியவந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் கண்ணன் மீது நடிகை புகார் கொடுக்க உள்ளாராம். இவர் ஏமாற்றிய பணத்தை நடிகை ஏமாற்றியதாக பொய்யான புகார் ஒன்றைக் கொடுத்து நாடகம் ஆடியுள்ளார்.