
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் விஜயபிரகாஷ்(29). சென்னையில் பொறியாளராக பணியாற்றி வரும் விஜயபிரகாஷுக்கும், கரிசல்காளன்பட்ட்யை சேர்ந்த சுபலட்சுமி என்ற(22) பெண்ணிற்கும் கடந்த மாதம் 28 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் வெளியே சென்று விட்டு விஜய்பிரகாஷும், சுபலட்சுமியும் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். விடத்தகுளம் - திருமங்கலம் சாலையில் இருவரும் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று வழிமறித்துள்ளது. இதனால் நிலைதடுமாறி விழுந்தபோது விஜய பிரகாஷை அந்த கும்பல் கடுமையாக தாக்கிவிட்டு மனைவி சுபலட்சுமியை அங்கிருந்து கடத்திச் சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து பதறிப்போன விஜய் பிரகாஷ் திருமங்கலம் காவல் நிலையில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் காரில் சுப்லட்சுமியை கடத்தி சென்றது அவரது முன்னாள் காதலன் சுங்குராம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் ஆழமாக விசாரணையை தீவிரப்படுத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுப்லட்சுமியும் ரமேஷும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமுகம் என்பதால், காதலுக்கு பெண்ணின் வீட்டில் இருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பெண்ணின் வீட்டார் விஜய்பிரகாஷை சுப்லட்சுமிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனிடையே பழைய காதலை சுப்லட்சுமி மறக்க முடியாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் ரமேஷுடன் சேர்ந்து வாழ விரும்பியுள்ள சுப்லட்சுமி இரவில் தனியாக கணவருடன் வருவதை ரமேஷிடம் கூறி, இந்த கடத்தல் திட்டத்திற்கான யோசனையையும் கொடுத்திருக்கிறார்.
அதன்படியே அன்று இரவு இந்த கடத்தல் நாடகம் அரங்கேறி இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரமேஷ் சுப்லட்சுமி ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.