
பிரதமர் மோடி தலைமையின் கீழ் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வழிகாட்டுதல்படி, தொடங்கப்பட்ட 'மத்திய உள்துறை அமைச்சரின் 'திறன் பதக்கம்' அனைத்து காவல்துறையினரின் மன உறுதியை பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31 ஆம் தேதி, அதாவது சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளன்று இப்பதக்கம் அறிவிக்கப்படும். இந்த ஆண்டுக்கான விருது பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றிய 400-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து புலனாய்வுப் பிரிவில் 7 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வந்திதா பாண்டே (ஏ.எஸ்.பி.), எம். அம்பிகா (ஆய்வாளர்), கே. மீனா (எஸ்.பி.), என். உதயகுமார் (ஆய்வாளர்), சி. கார்த்திகேயன் (ஏ.சி.பி.), நல்லசிவம் (ஏ.சி.பி.), எஸ். பாலகிருஷ்ணன் (ஆய்வாளர்) ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தடய அறிவியல் பிரிவில் சுரேஷ் நந்தகோபால் (துணை இயக்குநர்) என 8 பேர் 'மத்திய உள்துறை அமைச்சரின் திறன் பதக்கம்' பெறுகின்றனர். முதலில் இந்த விருது உள்துறை மந்திரியின் பதக்கம் என நான்கு வகைகளில் வழங்கப்பட்டு வந்தது. தற்போது கேந்திரிய கிரிமந்திரி தக்ஷதா பதக் என்ற பெயரில் பதக்கம் வழங்கப்படுகிறது.