Skip to main content

பெரியார் அண்ணா, கலைஞரால் வளர்க்கப்பட்ட திமுக என்பது ஆலமரம் போன்றது! திண்டுக்கல் லியோனி பேச்சு

Published on 25/03/2018 | Edited on 25/03/2018
leone


தமிழகத்தின் இருண்ட ஆட்சி என்ற தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி பேசியதாவது,

தமிழகத்தில் ஆட்சி ஒன்று இருந்தால் தானே வெளிச்சமும், இருட்டும் இருப்பது தெரியும். கடந்த ஒரு ஆண்டாக முதல்வரும், துணை முதல்வரும் இருண்ட முகத்துடன், பயந்து போய் இருக்கிறார்கள். எத்தனை நாள், மாதம் இப்படி பயந்து போய் அமர்ந்திருப்பார்கள் என்று தான் தெரியவில்லை. இவ்வாறு உள்ளவர்களால் நாட்டின் வளர்ச்சிக்காக என்ன செய்து விட முடியும். எந்த நேரத்தில் ஆட்சி கவிழும் என்று அவர்களுக்கே தெரியாது. இன்னும் சிறிதுகாலம் மட்டுமே நீடிக்க உள்ள இந்த கேவலமான ஆட்சி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரும்.

பல நெருக்கடிக்கு மத்தியில் அனைத்து மாவட்டத்திலும் கள இயக்கம் நடத்தி கட்சியை வலுப்படுத்தி வருபவர் மு.க.ஸ்டாலின். திமுக மேடையில் தான் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும் களை கட்டும்.

பொடி போடும் இடைவெளியிலும், திராவிடர்களுக்காக பேசியது அண்ணாவின் குரல். ஒரே ஒரு வார்த்தையான என் இனிய உடன்பிறப்புகளே என்று கூறும் ஒரு குரலுக்கு லட்சோப லட்சம் கைத்தட்டல்கள் பறக்கும். அண்ணாவின் குரலும், கலைஞரின் குரலும் கலந்து பேசும் மு.க.ஸ்டாலினின் குரல் தான் நாளைய முதல்வரின் குரல். திராவிட பாரம்பரியம் மாறாத குரலாக விளங்கி வருவது மு.க.ஸ்டாலினின் குரல்.

ரஜினி, கமல் போன்ற எந்த நடிகர்கள் கட்சி துவங்கினாலும் அவர்களால் எதுவும் சாதிக்க முடியாது. மண்டபத்தில் ரசிகர்களை அழைத்து, உங்க உங்க வேலைய பாருங்க; நான் என் வேலைய பார்க்கிறேன். 234 தொகுதியிலும் போட்டியிடுவோம், என்று ரஜினி கூறுகிறார். இது ஒரு கட்சியா?

அண்ணா, முதன்முதலாக தேர்தலில் போட்டியிடுவதற்கே 2 பெட்டி வைத்து மக்கள் கருத்துக்களையும், கட்சியினரின் கருத்துக்களையும் கேட்டு தான் தேர்தலில் போட்டியிட்டார். விஜயகாந்த் கட்சி இன்று காணாமல் போய் விட்டது. எத்தனையோ பேர் கட்சி துவங்கி வீணாகி விட்டார்கள். நடிகர்கள் துவங்கும் கட்சி என்பது நேற்று பெய்த மழையில் முளைத்த கற்றாழை போன்றது. பெரியார் அண்ணா, கலைஞரால் வளர்க்கப்பட்ட திமுக என்பது ஆலமரம் போன்றது. மக்களுக்கு நிழல் தருவது. இவ்வாறு லியோனி பேசினார்.

சார்ந்த செய்திகள்