சேலத்தில் பிரபல இரட்டை கொள்ளையர்கள் உள்பட மூன்று பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
சேலம் சூரமங்கலம் ஸ்டேட் பேங்க் ஆபீசர்ஸ் காலனியை சேர்ந்த வேணுகோபால் மகன் கார்த்தி (28). பள்ளப்பட்டி ஜவஹர் மில் பகுதியைச் சேர்ந்த பாலுசாமி மகன் சிவா என்கிற சிவானந்தம் (30) ஆகியோர் அம்மாபேட்டையில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த 2017ம் ஆண்டு, 35 பவுன் நகைகள், 3 கிலோ வெள்ளி கொலுசுகள், ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
![murder](http://image.nakkheeran.in/cdn/farfuture/WqBe6jpLUDiNeO--wFVkJMQeyoVZs6sdJojEfmjUGxA/1536879084/sites/default/files/inline-images/karthi_7.jpg)
![murder](http://image.nakkheeran.in/cdn/farfuture/Ic6ZgW6myJOL-BEubyLyw5eYystBc-ChyGOrMavymAQ/1536879132/sites/default/files/inline-images/sathish.jpg)
அதே ஆண்டு அக்டோபர் மாதம், கன்னங்குறிச்சி காவல் சரகத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகள், வெள்ளி பொருள்களை கொள்ளை அடித்தனர். மீண்டும் அம்மாபேட்டை சரகத்தில் கடந்த 13.8.2018ம் தேதி ஒரு வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், வீராணம் காவல் சரகத்தில் சந்திரசேகரன் என்பவரிடம் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி கத்தி முனையில் ரூ.2000 பறித்தனர்.
தொடர்ந்து கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இந்த இரட்டையர், போலீசுக்கும் போக்கு காட்டி வந்தனர். அவர்களை கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
![murder](http://image.nakkheeran.in/cdn/farfuture/052pFExkWVw7ef-G7BVr4oTsYEBqlLbgBLyN3jv5ND0/1536879166/sites/default/files/inline-images/siva_9.jpg)
தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததுடன், பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக விளங்கிய அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர், மாநகர போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கரிடம் பரிந்துரை செய்தனர். அவருடைய உத்தரவின்பேரில் இன்று கார்த்தி, சிவா என்கிற சிவானந்தம் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
அதேபோல், கொண்டலாம்பட்டி நாட்டாமங்கலம் முனியப்பன் கோயில் தெருவைச் சேர்ந்த மாணிக்கம் மகன் பிரபாகரன் என்கிற சதீஸ் (26), கொடுவாளால் பலரை தாக்கி வந்தார். அவரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.