![2 youth tragically passed away in government bus collision](http://image.nakkheeran.in/cdn/farfuture/NVTsD8vLids3KJMU1nh0HflApnZo3iHhmiW1x1dAVXE/1716639474/sites/default/files/inline-images/Untitled-21_22.jpg)
கடலூரில் இருந்து அரசு பேருந்து ஒன்று பரங்கிப்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்து பரங்கிப்பேட்டை அருகே உள்ள எச்.பி கேஸ் குடோன் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பரங்கிப்பேட்டையில் இருந்து குத்தாபாளையத்தை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற குத்தாபாளையத்தைச் சேர்ந்த ரஜினிகாந்த் மகன் கிரி என்கிற தமிழ் வளவன்(21), அதே பகுதியைச் சேர்ந்த கனகசபை மகன் கலைச்செல்வன்( 21) ஆகிய இருவரின் மீது எதிர்பாராத விதமாக பேருந்து மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பரங்கிப்பேட்டை காவல்துறையினர் 2 உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து செய்தி அறிந்த தமிழ்வளவன், கலைச்செல்வன் ஆகியோரின் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு சென்று காவல்துறையினரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்பு அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி உள்ளிட்டவைகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த இருவரும் கூலி வேலை செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கடலூர் மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்குப் பிறகு உறவினர்களிடம் இவர்களது உடல்கள் ஒப்படைக்கப்பட்டது.