தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக வடகிழக்கு பருவமழை பெய்துவருகிறது. இந்தப் பருவமழையால் சென்னையில் உள்ள பல்வேறு முக்கியமான இடங்களிலும் தண்ணீர் அதிகமாக தேங்கியுள்ளது. தேங்கிய தண்ணீரை ஆங்காங்கே மோட்டார் மூலம் வெளியேற்றியும் வருகின்றனர். இருந்தபோதிலும் சில தாழ்வான பகுதிகளில் தொடர் மழை காரணமாக தண்ணீர் அளவுக்கு அதிகமாக தேங்கியுள்ளது.
சென்னையில் அவ்வப்போது சில இடங்களில் அதிக கனமழை பொழிவதால் சுரங்கப்பாதை, தாழ்வான சாலை, தரைப்பாலம் போன்றவை முற்றிலுமாக நீரில் மூழ்கிவிடுகின்றன. அதனால் குறிப்பிட்ட இடங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. அந்தவகையில், கோயம்பேடு - மதுரவாயல் சாலையிலிருந்து பாடி குப்பம் செல்லும் கூவம் நதி தரைப்பாலம் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. இதனால் அந்தப் பாலம் மூடப்பட்டது.