Skip to main content

சூழலியல் தாக்க மதிப்பீட்டு சட்ட வரைவு 2020 மசோதாவால் காவிரி டெல்டா பாதுகாப்பு மண்டலம் அரசாணை பறிபோகும்!!! -பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை

Published on 28/07/2020 | Edited on 28/07/2020
pr pandian

 

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் திங்கட்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்போது அவர், இந்திய பொருளாதார வளர்ச்சியை காரணம் காட்டி கச்சா, நிலவாயு, நிலக்கரி சுரங்கம், தொழிற்சாலைகள், பெரும் சாலைகள் அமைப்பு போன்ற தொழில் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில், விவசாயம், இயற்கை வளங்கள் அழிந்துவிடக்கூடாது.

 

காற்று மாசு ஏற்பட்டும், பருவ கால மாற்றங்கள் மூலம் மனிதர்கள், கால்நடைகள் உள்ளிட்ட விலங்கினங்களுக்கு பேரழிவு ஏற்படுத்திவிடக் கூடாது. இயற்கை வளங்கள் அழிந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கிய வழிகாட்டுதல்களுடன் கூடிய சூழலியல் தாக்க மதிப்பீடு (Environment IMpact Assessment) என்ற சட்டம் 1994ம் ஆண்டு கொண்டுவரப்பட்டு நடைமுறையில் இருந்தது.

 

இச்சட்டம் மீது மாற்றம் செய்யப்பட்டு தற்போதையை தேவைக்கேற்ப உரிய வழி காட்டு நெறிமுறைகள் உருவக்கப்பட்டு, மக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு, பாதிப்பு இல்லாத வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு செயல்பட அனுமதி வழங்கப்படும். 

 

மேலும் சில திட்டங்களால் பேரழிவு ஏற்படும் என அறியப்படும் பட்சத்தில் அனுமதி மறுக்கப்படும். இதற்கான வகையில் சூழலியல் தாக்க மதிப்பீடு 2006 சட்டம் மாற்றி அமைக்கப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது. 

 

இந்நிலையில் தற்போது மாற்றம் செய்யப்படும் சூழலியல் தாக்க மதிப்பீடு சட்டம் 2020 உலக பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், மக்களின் கருத்துரிமையை பறிக்கும் வகையில் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணாக கொண்டு வரப்படுகிறது. 

 

இதன்மூலம் ஹைட்ரோகார்பன், மீத்தேன், பாறை எரிவாயு எடுப்பது போன்ற பேரழிவு திட்டங்களை மக்கள் கருத்தறியாமல் மத்திய அரசு அனுமதி வழங்க முடியும். மேலும் நீதிமன்றங்களின் தலையீடுகளை தடுத்து நிறுத்திடவும், மக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படாமலேயே எந்தவொரு திட்டத்தையும் ஒப்பந்தம் பெறும் நிறுவனங்கள் செயல்படுத்தக்கூடிய வகையில், மாறுதல்கள் செய்யப்பட்டு புதிய சட்ட வரைவு மசோதா கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநில அரசுகளின் உரிமையும் பறிபோகும். சூழலியல் பாதுகாப்பு என்பதைக் கைவிட்டு,மக்களின் குரல் வலையை நெறித்து, முதலீட்டை முதன்மைப்படுத்தும் நோக்கம் கொண்டதாகும். 

 

விளைநிலங்களை விவசாயிகளிடமிருந்து அபகரிக்க வழி வகுக்கும் என்பது இவ்வரைவின் மீதான சூழலியாளர்கள் மற்றும் விவசாயிகளின் முதல் பார்வையாக உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் மாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் அனுமதி பெறாமலேயே பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கும் வகையில் சாதமாக எளிமையாக்கி மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது.

 

2006ஆம் ஆண்டு சட்ட மசோதா மூலம் சூழலியல் தாக்க மதிப்பீட்டின்படி, இரண்டு அமைப்புகள் மூலம் அனுமதி பெற வேண்டும். அதன்படி மத்திய மற்றும் மாநில அரசுகளால் இரு தொழில்நுட்ப உயர்மட்டக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு அவர்களின் ஒப்புதல் பெற்று மத்திய,மாநில அரசுகளின் இரு சுற்றுசூழல் அமைப்புகளிடமும் சுற்றுசூழல் தடையில்லா  அனுமதி பெற வேண்டும். 

 

ஆனால் 2020 வரைவு மசோதா மூலம் ஒப்பந்தம் பெறும் நிறுவனமே வல்லுநர் குழு அமைத்துக்கொண்டு குறிப்பிட்ட திட்டம் குறித்த சூழலியல் (EIA) தாக்க அறிக்கை தயாரிப்புகளை ஆய்வுகளை நடத்தப்படும். அதன் அறிக்கையின்படி,  சுற்றுசூழல் தடையின்மை அனுமதி வழங்க வேண்டும். அவசரம் என என்னும் பட்சத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியின்றி மத்திய அரசே அனுமதி கொடுத்துவிடுவது.

 

இவை இரண்டு நடைமுறைகளுமே எந்தவிதத்திலும் மக்கள் நலனுக்கு ஆதாரவனதாகவோ, சூழலியல் பாதுகாப்புக்கு உகந்ததாகவோ இருக்காது என்பது சூழலியல் ஆர்வலர்களின் முதன்மையான குற்றச்சாட்டாக உள்ளது.

 

மேலும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தன்னுடைய செயல்பாடுகள் குறித்த அறிக்கையை ஒவ்வொரு தொழில் நிறுவனமும் சமர்ப்பிக்க வேண்டும் என்றிருக்கும் விதிமுறையை மாற்றி ஆண்டுக்கு ஒருமுறை சமர்ப்பிப்பது மட்டுமே போதுமானது என்று புதிய சட்டவரைவு மசோதாவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்படும் கால அவகாசம் திட்டத்திலுள்ள சூழலியல் மற்றும் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகளை மூடிமறைப்பதற்கு வாய்ப்பளிக்கும் என்றும் அஞ்சுகின்றனர்.

 

சதுப்பு நிலக்காடுகளில் மணல் போட்டு சமன்படுத்துவதற்கு அனுமதியோ அல்லது சூழலியல் தாக்க மதிப்பீடோ செய்ய தேவையில்லை என்ற வாய்ப்புகள் இந்த வரைவில் இணைக்கப்பட்டுள்ளன. 

 

இதன்மூலம் சூழலியல் நோக்கில் பார்த்தால் ஒவ்வொரு நிலப்பகுதி சூழலின் நீர்வளத்துக்கு பெரும் ஆதாரமாக விளங்குபவை சதுப்புநிலப்பகுதிகள்தான் என்ற உண்மையை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.

 

வறண்ட புல்வெளிக் காடுகள், இந்தப் புதிய சட்ட வரைவினால் தரிசு நிலங்களாக கணக்கு காட்டப்பட்டு உலகபெரும் தொழில் நிறுவனங்களுக்கு தாராளமாக தாரைவார்க்கப்படும்.

 

இதுபோன்ற சுற்று சூழலியலுக்கு எதிரான அம்சங்கள் இருப்பதால் பேரழிவு ஏற்பட வழிவகுக்கும் என்பதை ஆதாரத்துடன் எடுத்துரைத்து சூழலியல் தாக்க மதிப்பீடு மசோதா 2020 யை கைவிட சூழலியல் வல்லுநர்களால் வலியுறுத்தப்படுகிறது.

 

தமிழகத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியின்றி எரிவாயு குழாய் பதிப்பதற்கும், சாலைகள் அமைப்பது கச்சா, எரிவாயு எடுப்பதற்கான அனுமதியை நேரடியாக மத்திய அரசே அனுமதி வழங்கும் சட்ட திருத்தம் கொண்டு வர வலியுறுத்தி, 2017ல் தமிழக சுற்றுசூழல் துறை அமைச்சர் கருப்பணன் கொடுத்த கடிதத்தை தொடர்ந்து இம்மசோதா கொண்டு வரப்படுகிறதோ என அஞ்ச தோன்றுகிறது.

 

மேலும் இம்மசோதா சட்டமாக்கப்படும் பட்சத்தில் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிப்பு செய்து வெளியிடப்பட்டுள்ள அரசாணை பறிக்கப்படும் பேராபத்து ஏற்படும். எனவே இம்மசோதா குறித்து தமிழக முதலமைச்சர் தனது அரசின் கொள்கை நிலையை தெளிவுப்படுத்த வேண்டும்.

 

மசோதா மீதான மக்கள் கருத்து கேட்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா தாக்குதலால் உலகமே முடங்கி உள்ள நிலையில், கருத்து கேட்புக்கான கால அவகாசத்தை மேலும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை நீட்டித்து தர வேண்டும். 

 

மக்கள் மற்றும் சூழலியல் வல்லுநர்கள் கருத்துகளுக்கு மதிப்பளித்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தும் வகையில் மாற்றங்கள் செய்தால் மட்டுமே சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு மசோதா 2020-ஐ  நடைமுறைபடுத்த வேண்டும், இல்லையேல் கைவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்