Skip to main content

பெருமாளுக்கு பக்தன்; பெரியாருக்கு பேரன் - துரை வைகோவின் அரசியல்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
mdmk Durai Vaiko's politics full details

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் முன்னணி அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒபந்தம் இறுதிசெய்து தேர்தல் பணிகளில் அதிரடி காட்டி வருகின்றன். அந்த வகையில், தமிழகத்தை ஆளும் திமுக கூட்டணியில்  காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒத்துக்கப்பட்டுள்ளது. விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் அகிய கூட்டணி கட்சிகளுக்கு திமுக தலா 2 இரண்டு தொகுதிகள் ஒதுக்கியுள்ளது. மற்ற கூட்டணி கட்சிகளான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு தலா ஒரு தொகுதி என 19 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கும், மற்ற 21 தொகுதிகளில் திமுக 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றது.

இந்த நிலையில், இந்த முறை திருச்சி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியிடம் இருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சென்றுள்ளது. ஆனால், மதிமுக விருதுநகர் தொகுதியை கேட்டதாகவும், அதற்கு அடுத்த பரிந்துரையில் தான் திருச்சி இருந்ததாகவும் அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக ஒரு எம்.பி தொகுதியும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் திமுக கூட்டணியில் பெற்றநிலையில், இந்த முறை ஒரு எம்.பி தொகுதி மட்டுமே மதிமுக வசம் சென்றுள்ளது. இதற்கு அரசியல் வட்டாரத்தில் சில காரணங்கள் சொல்லப்படுகிறது. திமுகவிடம் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த மதிமுக அழுத்தமாக இரண்டு எம்.பி சீட் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், திமுக தலைமையோ நிர்பந்திக்காமல், ஒரு தொகுதியை பெறுங்கள், ராஜ்ய சபா தேர்தல் வரும்போது மற்றதை பார்த்துக்கொள்ளலாம் என சொல்லி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

mdmk Durai Vaiko's politics full details

இதையடுத்து, முழுமனதுடன் மதிமுக திருச்சியை கேட்டு வாங்கியுள்ளது. தேர்தலுக்கு நாட்கள் குறைவாக இருப்பதால், திருச்சியில் துரை வைகோ மதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அக்கட்சியின் தொண்டர்கள் தேர்தல் வேலைகளை அதிரடியாக செய்துவருகின்றனர். இதனிடையே, காங்கிரஸ் கட்சியின்  திருச்சி சிட்டிங் எம்பி திருநாவுக்கரசரின் செயல்பாடுகள் தலைமைக்கு திருப்தியாக இல்லாத காரணத்தால், இந்த முறை மதிமுகவிடம் தொகுதி கைமாறியதாக அரசியல் வட்டாரத்தில் அதிகம் பேசப்படுகிறது. இதையடுத்து, தேர்தல் தொகுதி ஒப்பந்தம் உறுதியான நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.

மேலும் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் ம.தி.மு.க வேட்பாளர் துரை.வைகோ தன்னை அறிமுகம் செய்துகொண்டு ஆதரவு கோரி உரையாற்றினார். இந்நிகழ்வில் திருச்சி மாநகர தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் ம.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, முதன்முறையாக வியாழன் காலை, திருச்சிக்கு வருகைதந்த மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, நேரடியாக ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சாமி திருக்கோவிலுக்குச் சென்று பெருமாளை வழிபட்டார்.

mdmk Durai Vaiko's politics full details

அதன்பிறகு, கோவிலுக்கு நேர் எதிரே உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பெரியாருக்கு மாலை அணிவித்தபோது விண்ணதிர முழக்கங்கள் எழுப்பப்பட்டது. பெரியாரும் வேண்டும் பெருமாளும் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் துரை வைகோவை திருச்சி மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் ம.தி.மு.க.வினர் இப்போதே ஆயத்தம் ஆகி வருகின்றனர். இந்த நிலையில், துரை வைகோவுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாழ்த்துப்பெற வந்தார் திருச்சி வேட்பாளர் தம்பி துரை வையாபுரி. தீயின் பொறி.. திராவிட நெறி.. தேர்தலே வெறி.. திருச்சியே குறி.. நிறைவெற்றி காண்பார் துரை வையாபுரி" எனக் குறிப்பிட்டிருந்தார். 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு குறித்து நீலகிரி ஆட்சியர் விளக்கம்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின. 

Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

இந்நிலையில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி செயலிழந்தது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும், நீலகிரி மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, “ வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் நேற்று (27.04.2024) மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்களுக்கு 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்துவிட்டன. அந்தக் குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை.

அதாவது அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டு சிசிடிவி கேமராவில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. மேலும் இது குறித்து சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்துச் சென்று காட்ட தயாராக இருக்கிறோம். மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 3 கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு குறைபாடுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் இதுபோல் எந்தப் பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தகது.