Skip to main content

வெற்றிக்கான ப்ளூ ப்ரிண்ட்; நிர்வாகிகளிடம் கொடுத்த இபிஎஸ்

Published on 27/01/2023 | Edited on 27/01/2023

 

EPS consults with AIADMK executives on Erode by-elections

 

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்யவும், தேர்தல் பணிக்குழு அமைக்கவும், வேலைகளை ஒருங்கிணைக்கவும் கடந்த 26 ஆம் தேதி அதிமுக எடப்பாடி பழனிசாமி ஈரோட்டிற்கு நேரில் வந்தார். அன்று ஈரோடு பகுதி அதிமுக நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்த எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து 27 ஆம் தேதி மாநில அளவிலான நிர்வாகிகளை ஈரோட்டுக்கு அழைத்து தேர்தல் ஆய்வுக் கூட்டமும் நடத்தினார். அதில் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களுக்கு வாக்காளர் பட்டியல் விவரங்களையும் எடப்பாடி பழனிசாமி கொடுத்தார். 

 

இக்கூட்டத்தை தொடங்கி வைத்த பின் எடப்பாடி பழனிசாமி, “ஈரோடு கிழக்கு தொகுதியில் அசோகபுரம், அக்ரஹாரம், கருங்கல்பாளையம், பெரியார் நகர், வீரப்பன் சத்திரம் என ஐந்து பகுதிகள் உள்ளன. இந்த ஐந்து பகுதிகளுக்கும் பூத் வாரியாக கழக நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்கு சென்று அந்த பூத்தில் இடம்பெற்றுள்ள பொறுப்பாளர்களைச் சந்திக்க வேண்டும். ஒவ்வொரு பூத்திற்கும் வாக்காளர் பட்டியல், ஏற்கனவே அதிமுக பெற்ற வாக்குகள், வார்டு விபரம், பொறுப்பாளர்கள், பகுதி செயலாளர் விபரம் உள்ளிட்ட விபரங்கள் உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிக்குச் சென்று ஒரு கூட்டத்தைக் கூட்டி, நமது பணியை ஆரம்பிக்க வேண்டும்.

 

இதில், நிர்வாகிகள் பெயர் விடுபட்டு இருந்தால் அவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாளை முதல் வீடு வீடாகச் சென்று அந்த வீட்டில் வாக்காளர் இருக்கிறாரா இறந்து போய்விட்டாரா என்பது குறித்த விபரம் எடுக்க வேண்டும். ஈரோடு கிழக்குத் தொகுதியில் நிறைய வாக்காளர்கள் வெளியூர் சென்றுள்ளனர். வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்கள் பலபேர் இல்லை என்ற செய்தி வந்திருக்கிறது. எனவே, பூத் குழு பொறுப்பாளர்கள் அந்த கணக்கை எடுக்க வேண்டும். விரைவாக நமது வேட்பாளர் அறிவிக்கப்படுவார். இதோடு, இந்த பகுதியில் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், நன்மைகள், இந்த ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரங்களை பட்டியலிட்டு நோட்டீஸ் வழங்கப்படும்.  அதை வீடு வீடாக வழங்க வேண்டும்.

 

எதிரிகள் தங்களது பணியை ஆரம்பித்து விட்டனர். நமது பூத் பொறுப்பாளர்கள், வாக்காளர்கள் அந்தந்த முகவரியில் உள்ளார்களா என்ற பணியை 3 நாட்களில் செய்து முடிக்க வேண்டும். நீங்கள் தங்குவதற்கு தேவையான இட வசதி செய்து தரப்படும். யாருக்காவது உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தால், அவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டாம். திடகாத்திரமானவர்களை அழைத்து வாருங்கள்.  உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை தவிர்த்து தேர்தல் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யுங்கள்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.