
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயுத்தமாகி வருகின்றனர். அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் காக்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. இது தவிர மற்ற கட்சியான தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்த தேர்தலில் முதல் முறையாக களமிறங்க உள்ளார். இதனால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் திமுகவில் கட்சியைப் பலப்படுத்தும் வகையில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியை திமுக தலைமை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலில் தமிழ்நாடு முழுவதும் வரும் 20ஆம் தேதி (20.06.2025) முதல் திமுக நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று புதிய உறுப்பினர்கள் சேர்க்க பணியைத் தொடங்க வேண்டும்.
இதற்காக ஒவ்வொரு வீட்டிலும் திமுக உறுப்பினராக யார்? யார்? உள்ளனர் என்ற விவரங்களைக் கேட்டு அதன் அடிப்படையில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியைத் தொடங்க வேண்டும் என திமுக தலைமை சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உறுப்பினர் சேர்க்கையின் போது திமுக அரசின் திட்டங்களையும், திமுக நடத்திய போராட்டங்களையும் மக்களிடம் விரிவாக விளக்கி புதிய உறுப்பினர் சேர்க்கும் பணியைத் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 முதல் 11 மாதங்களே உள்ள நிலையில் திமுகவின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. முன்னதாக ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் குறைந்தபட்சம் 30% வாக்காளர்களை திமுக உறுப்பினராகச் சேர்க்க வேண்டும் என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.