Skip to main content

“கூட்டணியில் மதவாதம் துளிர்விட்டால் இ.பி.எஸ். வெளியேறிவிடுவார்” - ராஜேந்திர பாலாஜி உறுதி! 

Published on 11/06/2025 | Edited on 11/06/2025

 

Rajendra Balaji says If communalism sprouts in the alliance EPS will leave

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சிவகாசியில் பூத் கமிட்டி  நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேசுகையில், “அதிமுகவை எதிர்க்கும் தைரியமும் துணிச்சலும் திமுகவுக்கு கிடையாது. அதிமுகவிற்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே கிடையாது. இ.பி.எஸ். இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது. மதவாதம் துளிர்விட்டால் அங்கு இ.பி.எஸ். இருக்க மாட்டார்.

ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி என்னைச் சிறையிலடைக்க முயற்சி செய்கிறார்கள். அது நடக்கவே நடக்காது. நான் யாரையும் ஏமாற்றி மோசடி செய்யவில்லை. திமுகவை நாட்டை விட்டு விரட்டும் வரை நான் ஓயமாட்டேன். கூட்டணி ஆட்சி என்று யார் சொன்னது?. தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் ஆட்சி நடக்கும். பெருவாரியான சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அதிமுக தலைமையில்தான் ஆட்சி அமையும்.

2026 சட்டமன்றத் தேர்தலில் 20 தொகுதிக்கு மேல் திமுக வெற்றி பெறாது. பிரபாகரனுக்கு நிகரான வீரம் உள்ளவர் எடப்பாடி பழனிச்சாமி. மக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்கத் தயாராகிவிட்டார்கள், அதை மொத்தமாக அள்ளுவதற்குத் தொண்டர்கள் பாடுபட வேண்டும்” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்