Union Minister Amit Shah visits him in person for Passenger who survived plane incident

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் ஏர் இந்தியா விமானம் இன்று (12.06.2025) மதியம் லண்டன் நோக்கிச் செல்ல முற்பட்டது. அப்போது இந்த விமானத்தில் திடீரென ஏற்பட்ட இன்ஜின் செயல் இழப்பால் விமானம் புறப்பட்ட 5வது நிமிடத்திலேயே விபத்தில் சிக்கியது. அதாவது விமான நிலையத்திற்கு அருகில் உள்ள மெஹானி எனும் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் 2 பைலட்கள், 10 பணியாளர்கள், 230 பயணிகள் இருந்த நிலையில் இதுவரை 204 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய உயிரிழந்தவர்களில் உடல்களில் பெரும்பாலானவை கருகிய நிலையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகைய சூழலில் தான் அகமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் ஏ.என்.ஐ. (ANI) செய்தி நிறுவனத்திடம் தொலைபேசியில் பேசுகையில், “விமானத்தின் 11 ஏ இருக்கையில் பயணித்த விஸ்வாஸ் குமார் என்ற ஒருவர் உயிர் பிழைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். மருத்துவமனையில் உயிர் பிழைத்திருந்த நிலையில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர் சிகிச்சையில் உள்ளார். விமான விபத்தின் போது ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை குறித்து தற்போது எதுவும் கூற இயலாது. விபத்துக்குள்ளான விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும்” எனத் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு, சிவில் விமான போக்குவரத்து இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் மற்றும் குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி ஆகியோரும் உடன் இருந்தனர். இதனையடுத்து இந்த விமான விபத்து தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில், ஆலோசனைக் கூட்டம் ஒன்று கூட்டம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து உயிர் பிழைத்த ஒரே நபராகக் கருதப்படும் காயமடைந்த விஸ்வாஸ் குமாரைய்ம், சிகிச்சையில் உள்ள மற்றவர்களையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதே சமயம் இந்த விமான விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளின் உறவினர்கள், அகமதாபாத் மருத்துவமனையில் உள்ளக் கருத்தரங்க கூடத்தில் பயணிகள் குறித்த விவரங்களுக்காகக் காத்திருக்கின்றனர். இதற்கிடையே இந்த விமானம் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதாவது அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில வினாடிகளில் விமானம் கீழே விழுந்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதில் விமானம் வானிலேயே செயலிழந்து கீழே விழுந்து வெடித்துச் சிதறும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.