
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அதிமுகவில் கட்சி பணிகள் மேற்கொள்ள 82 மாவட்ட பொறுப்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நியமித்திருந்தார்.
அதில் முன்னாள் அமைச்சர்களான பொன்னையன், தம்பிதுரை, செம்மலை, வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச் செல்வன், செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்டவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜூன் 24, 25 ஆகிய இரு தேதிகளில் அதிமுகவின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்களோடு சேர்ந்து மாவட்ட பொறுப்பாளர்களையும் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார். சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சியின் தலைமையகமானஎம்.ஜி.ஆர். மாளிகையில் இந்த இரு நாட்களில் காலை, மாலை என்று இரு வேளையிலும் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.