
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்துள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத்தலங்கள் அருகே மதுபான மனமகிழ் மன்றம் அமைக்கத் தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அமர்வில் நடந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது “மனமகிழ் மன்றத்திற்கு எதன் அடிப்படையில் அனுமதி கொடுக்கப்படுகிறது? உடைந்த 2 கேரம் போர்டுகளை வைத்துக்கொண்டு மனமகிழ் மன்றம் என்ற பெயரில் பார் நடைபெறுகிறது. பதிவு செய்யப்பட்ட மனமகிழ் மன்றங்களின் பை லா (By-Law) என்ன?. எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்?.
அதற்குத் தகுந்தாற்போல் மதுபானங்கள் விநியோகிக்கப்படுகிறதா?” என நீதிபதிகள் கேள்விகள் எழுப்பினர். அதோடு, “விருதுநகர் மாவட்ட ஆட்சியர், கலால் துறை ஆணையர், டாஸ்மாக் இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும்” என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். முன்னதாக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், “விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்துள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் டாஸ்மாக் மனமகிழ் மன்றம் அமைக்க விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். மனமகிழ் மன்றம் அமைக்கப்படவுள்ள இடம் அதிக அளவில் பொது மக்கள் நடமாடும் இடமாகும்.
மேலும், அந்தப் பகுதி அருகே வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், மருத்துவமனை மற்றும் வணிக வளாகங்கள் நிறைந்துள்ளன. பள்ளி மற்றும் வழிபாட்டுத் தலங்களில் இருந்து 100 மீட்டருக்கு அப்பால்தான் மதுக் கடைகள் இருக்க வேண்டும். ஆனால், விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. எனவே, பார் அமைக்க மாவட்ட ஆட்சியர் வழங்கிய அனுமதியை ரத்து செய்து, எதிர்காலத்தில் அந்த இடத்தில் பார் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம், நீதிபதி மரிய கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “எப்.எல். 2 (FL2) மனமகிழ் மன்றம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்துதான் நீதிபதிகள் மேற்கண்டவாறு கேள்விகள் எழுப்பினர். மனமகிழ் மன்றங்களைக் கலால் துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்கின்றனரா அனுமதி மட்டும் வழங்கினால் போதுமானதாக இருக்குமா? அதனை முறையாக ஆய்வு செய்ய வேண்டாமா?. டாஸ்மாக் பார் என்ற பெயரில் அனுமதி வழங்கினால் பிரச்சனை வரும் என்பதற்காக மனமகிழ் மன்றம் என்று அனுமதி வழங்கப்படுகிறது” எனத் தெரிவித்த நீதிபதிகள், இது குறித்துப் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரக் காலத்துக்கு ஒத்திவைத்தனர்.