Skip to main content

தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்கள்; படகை உடைத்த இலங்கை கடற்படை!

Published on 19/06/2025 | Edited on 19/06/2025

 

Fishermen who went to sea after the ban period ended Sri Lankan Navy breaks the boat

தமிழ்நாட்டில் கடல் வளம், மீன் வளம் பெருக வேண்டும் என்பதற்காக 60 நாட்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுவது வழக்கம். இந்த நாட்களில் மீனவர்களின் உணவுக்காக நிவாரணம் வழங்கப்படுகிறது. இந்த தடை காலங்களில் லட்சக்கணக்கில் கடன் வாங்கி மீன் பிடி படகுகளைப் பழுது பார்த்து தாயார் நிலையில்  வைத்திருந்தனர்.  இத்தகைய சூழலில் தான் கடந்த 16ஆம் தேதி (16.06.2025 - திங்கள் கிழமை) புதுக்கோட்டை மாவட்ட கடற்பகுதியில் காற்று அதிகமாக இருந்ததால் தடைக்காலம் முடிந்தும் கடலுக்குள் செல்ல அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் நேற்று (18.06.2025) புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து சுமார் 350 விசைப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குள் சென்றனர்.

இதில் கோட்டைப்பட்டினத்தில் இருந்து சுமார் 200 விசைப் படகுகளில் சுமார் 900 மீனவர்கள் 60 நாட்களுக்குப் பிறகு தடைக்காலம் முடிந்து முதல் நாளில் கடலுக்குள் சென்றுள்ளனர். இதில், ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சசிவர்ணம், சேது, முனிராஜ், மகேந்திரன் ஆகிய மீனவர்கள் இந்திய எல்லையில் 18 நாட்டிக்கல் மைலில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச் சென்ற அதிநவீன இலங்கை கடற்படை ரோந்து படகில் வந்த கடற்படையினர் மீனவர்கள் படகை இலங்கை எல்லைக்குள் இழுத்துச் சென்று இருப்பு கம்பிகளால் மீனவர் படகை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அதோடு வலை உள்ளிட்ட பொருட்களையும் சேதப்படுத்திப் பல மணி நேரங்களுக்குப் பிறகு அனுப்பியுள்ளனர். சேதமான படகில் உயிர் பயத்தில் இருந்த மீனவர்கள் இன்று (19.06.2025) கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர்.

தடைக்காலத்தில் வட்டிக்குக் கடன் வாங்கி படகுகளைப் பழுது நீக்கி முதல் நாள் கடலுக்குள் போனதுமே இலங்கை கடற்படை தனது அட்டூழியத்தை தொடஙகிவிட்டது. படகை உடைத்துச் சேதப்படுத்திவிட்டனர். இனி மறுபடி படகைச் சீரமைத்து வலைகள் வாங்க ரூ. 3 லட்சம் வரை தேவைப்படும். இனிமேல் எங்கே கடன் வாங்குவது. இந்தியத் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது தொடர்ந்து நீடிக்கிறது. இதனை மத்திய மாநில அரசுகள் தடுக்கவும் மீனவர்களுக்கான பாதுகாப்பை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் மீனவர்கள். மேலும், தடைக்காலம் முடிந்து நம்பிக்கையோடும் ஆசையோடும் கடலுக்குள் சென்ற மீனவர்களுக்கு மீன்கள் சிக்காமல் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. 

சார்ந்த செய்திகள்