
திருச்சி எஸ்.பியாக பணியாற்றி பதவி உயர்வு பெற்று திருச்சி மத்திய மண்டல டிஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்ட வருண் குமார் ஐபிஎஸ், நாம் தமிழர் கட்சி மீதான பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். மேலும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, வருண்குமார் ஐபிஎஸ் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், தன் மீதும் தனது குடும்பத்தினர் மீதும் நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து அவதூறு தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பிய வருவதால், தானும் தன் குடும்பமும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். மேலும், சீமான் மீது குற்ற நடவடிக்கை எடுப்பதுடன் ரூ.2 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் தனது மனுவில் வருண் குமார் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு, நீதிபதி பாலாஜி அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. இரு தரப்பு வாதங்களை தொடர்ந்து கேட்டு வந்த நீதிபதி, சீமான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு, இன்று (07-04-25) மீண்டும் நீதிபதி பாலாஜி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமான் ஆஜராகாமல் அவரது வழக்கறிஞர் மட்டும் வருகை தந்திருந்தனர். இதனை விசாரித்த நீதிபதி, ‘இன்று (07-04-25) மாலை 5 மணிக்குள் சீமான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். இல்லையென்றால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்’ என எச்சரிக்கை விட்டு உத்தரவிட்டார்.