Skip to main content

கொட்டி தீர்த்த கனமழை; மிதக்கும் உத்தரகாண்ட் - 16 பேர் பலி!

Published on 19/10/2021 | Edited on 19/10/2021

 

uttarakhand

 

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாகக் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாநிலமே மிதந்து வருகிறது. இந்த வெள்ளத்தின் காரணமாகவும், இந்த மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவு, கட்டிட இடிபாடு, வெள்ளம் உள்ளிட்டவற்றில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்பதால், இந்த மழையின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. அதேபோல் பிரபல சுற்றுலாத்தலமான நைனிடால், மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே உத்தரகாண்ட் மாநிலத்தில் மீட்புப்பணிகளில் மூன்று இராணுவ விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதேபோல் உத்தரகாண்டின் தற்போதைய நிலைமை குறித்து பிரதமருக்கும், மத்திய உள்துறை அமைச்சருக்கும் விளக்கப்பட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

 

இந்த சூழலில், உத்தரகாண்ட் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, அம்மாநிலத்தில் இன்று முதல் மழை குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

  

சார்ந்த செய்திகள்

Next Story

வரலாறு காணாத கனமழை; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Unprecedented heavy rains in california

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பொழிந்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. 

அதன்படி, கலிபோர்னியா பகுதியில் நேற்று (06-02-24) வரலாறு காணாத கனமழைக் கொட்டித் தீர்த்தது. இதில், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட சில இடங்களில் 25 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இந்த வெள்ளத்தின் போது பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் பலரும் அதில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மணிக்கு 78 மைல் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றால் கிட்டத்தட்ட 8,75,000 வீடுகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பலரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

வரலாறு காணாத இந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த மழை வெள்ளத்தால் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த வெள்ளம் குறித்து தேசிய வானிலை மையம் கூறியுள்ளதாவது, ‘5 முதல் 10 அங்குலங்கள் (12.7செ.மீ முதல் 25.4 செ.மீ) வரை பெய்துள்ளது. மேலும், இந்த மழையின் அளவு அதிகரிக்கக்கூடும்’ என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

Next Story

5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Chance of rain in 5 districts

வடகிழக்கு பருவமழையின் தொடர்ச்சியாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பொழிந்து வருகிறது. அதன்படி தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தின் ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது காலை 9.35 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.