Skip to main content

உ.பி வன்முறை: இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்த இரு மாநில முதல்வர்கள்!

Published on 06/10/2021 | Edited on 06/10/2021

 

punjab and chattisgarh cm

 

உத்தரப்பிரதேசம், லக்கிம்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகள், பாஜகவினர், பத்திரிகையாளர் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து  ஆறுதல் கூறுவதற்காகச் சென்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை உத்தரப்பிரதேச காவல்துறையினர் தடுப்பு காவலில் வைத்தனர்.

 

மேலும், லக்கிம்பூருக்குச் செல்ல அனுமதி கோரிய ராகுல் காந்தி தலைமையிலான ஐவர் குழுவிற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து, ராகுல் காந்தி உட்பட மூன்று பேர் மட்டும் லக்கிம்பூர் செல்ல மீண்டும் காங்கிரஸ் சார்பில் உத்தரப்பிரதேச அரசிடம் அனுமதி கோரப்பட்டது. இதனையடுத்து உத்தரப்பிரதேச அரசு, ராகுல் காந்தியுடன் மேலும் மூவர்  லக்கிம்பூர் செல்ல அனுமதியளித்தது. மேலும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பிரியங்கா காந்திக்கும் லக்கிம்பூர் செல்ல உத்தரப்பிரதேச அரசு அனுமதியளித்தது.  இதனையடுத்து ராகுல் காந்தி, பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சன்னி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் ஆகியோர் தற்போது டெல்லியிலிருந்து விமானத்தில் உத்தரப்பிரதேசத்தின் லக்னோ விமான நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு செய்தியாளர்களிடம் பேசிய சத்தீஸ்கர் முதல்வரும், பஞ்சாப் முதல்வரும் லக்கிம்பூர் வன்முறையில் இறந்தவர்களுக்கு நிவாரண தொகையை அறிவித்துள்ளனர்.

 

இதுதொடர்பாக பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சன்னி கூறுகையில், "கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களுடன் நாங்கள் நிற்கிறோம். பஞ்சாப் அரசின் சார்பில், பத்திரிகையாளர் உட்பட இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

 

அவரைத்தொடர்ந்து பேசிய சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், "சத்தீஸ்கர் அரசின் சார்பில், வன்முறையில் இறந்த விவசாயிகள் மற்றும் பத்திரிகையாளரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்